திருவாரூர் அருகே மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இரண்டரை வருஷத்துக்கு முன்பு மைதிலி என்பவருடன் திருமணம் நடந்தது. ஒருசில மாதங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள். பிறகு வரதட்சணை கேட்டு கொடுமை ஆரம்பமாயிற்று.
மைதிலியை தொடர்ந்து வரதட்சணை கேட்டு அருணும், மாமனார் இளங்கோவும் மாமியார் சுபாவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். இந்த சண்டை நேற்றுமுன்தினம் வரை தொடர்ந்ததையடுத்து, ஆத்திரமும், விரக்தியும் கொண்ட மைதிலி, நேற்று தன் உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் மைதிலியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். 80 சதவீதம் உடல் எரிந்த நிலையில், மைதிலிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை பற்றி மைதிலி சொல்லும்போது,வரதட்சணை கேட்டு கணவன், மாமனார் தன்னை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அதனால்தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வைப்பூர் காவல்துறை, அருண் மற்றும் மாமனார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் நாகை சிறைச்சாலையில் அடைத்தனர்.