நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்தில் ஆற்றில் இறங்கி சிலர் குளித்த போது நடந்த விபரீதம் இது! அப்போது உயிரைப் பணயம் வைத்து இருவரைக் காப்பாற்றியுள்ளனர் போலீஸார். ஆற்றில் அடித்துச் சென்று கொண்டிருந்த தந்தை மகன் இருவரையும் உயிருடன் மீட்ட திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது
திருச்செங்கோடு அடுத்த பட்லூர் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு குளித்துக் கொண்டிருந்தனர் ஈரோட்டை சேர்ந்த தந்தை திருமூர்த்தி (40 ) மகன் கிருஷ்ணன் (9). அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி இருவரையும் உயிருடன் மீட்டனர்!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்த தந்தை திருமூர்த்தி, மகன் கிருஷ்ணன் இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்!
இதனைக் கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன் இறையமங்கலம் பகுதியில் ரோந்தில் இருந்த தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் அளித்துவிட்டு ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்திச் சென்றுள்ளார்!
தகவலறிந்து மீட்புப் பணிக்காக சென்ற திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார், கோவிந்தசாமி, துரைராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் விரைந்து இறையமங்கலம் பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்லூர் காவிரி ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளனர்!
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மோகன் ஆற்றில் இறங்கி இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இருந்த போது மற்ற வீரர்களும் ஆற்றில் நீந்தி தந்தை மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவருக்கும் முதலுதவி செய்து அவர்கள் வந்த தீயணைப்பு வாகனத்திலேயே இருவரையும் இறையமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சேர்த்து இருவரையும் காப்பாற்றி யுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் இச்செயல்
அனைவரையும் நெகிழ வைத்தது.!
– செய்தி: கே.சி.கந்தசாமி