முதல் படம் தோல்வியடைந்தது, இருந்தாலும் இரண்டாவது படத்தில் ராசியான நடிகை எனப் பேர் பெற்றார் இந்த வாரிசு நடிகை. கோவில் கட்டாத குறையாக ரசிகர்கள் இவரை தலைமேல் வைத்துக் கொண்டாடினார்கள். ஆனால், அடுத்தடுத்த படங்களில் அவரது அழகு மட்டும் வைத்து எதுவும் பேர் வரவில்லை
பெரும் எதிர்பார்ப்போடு வெளியான பிரபல இயக்குநர் மற்றும் முன்னணி நடிகருடன் இவர் நடித்த படமும் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. இதனால் ராசியில்லாத நடிகை என்றும், நடிக்கவே தெரியவில்லை என்றும் இவரைக் குற்றம் சாட்டினார்கள்.அப்படி பேசியவர்கள் முகத்தில் எல்லாம் கரியைப் பூசும்படி, ஒரு படத்தில் நடித்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அந்த ஒரு படத்திற்காகவே அவரை ஆஹோ, ஓஹோவென கொண்டாடினார்கள். அடுத்தடுத்து தமிழின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.
வழக்கம் போல், அழகு பொம்மையாகவே வந்து செல்லும் கேரக்டர். இதனால் மீண்டும் நடிகையின் மார்க்கெட் சரிந்தது. தற்போது சொல்லிக் கொள்ளும் வகையில் கையில் படங்கள் ஏதும் இல்லை. புதிய வாய்ப்புகளைத் தான் அவர் தேடி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் உடல் எடையை நன்றாகக் குறைத்தார் இவர். இதனால் முன்பிருந்த பப்ளி லுக் காணாமல் போனது. நோய் வந்த மாதிரி ஆகிவிட்டார் என அவர் காதுபடவே பலர் பேசினர். ஆனாலும், அம்மணி அதைக் கண்டு கொள்வதாக இல்லை.தற்போது அவரை ஆந்திர தேசத்து சூப்பர்ஸ்டார் மகன் நாயகனாக நடிக்கும் படத்திற்காக தயாரிப்பாளர் அணுகியுள்ளார். அப்போது ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் மட்டுமே அவருடன் நடிப்பேன் என கண்டிப்பாகக் கூறிவிட்டாராம் நடிகை. இதனால் ஷாக் ஆகி விட்டாராம் தயாரிப்பாளர்.