ஆன்மிகம் கரை புரண்டு ஓடும் இந் நாளில், உலகெங்கும் பிள்ளையார் பிரியர்கள் அதிகரித்து விட்டனர். தமிழ் நாட்டுக் கோயில்களில் முதலாம் சன்னதியில் முழ முதற் கடவுளாக இருக்கும் பிள்ளையார் இன்று அனைத்துலக அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். ஐரோப்பிய, அமெரிக்க நகரங்களில் எல்லாம் விநாயகருக்குக் கோயில்கள் கட்டப்பட்டு, ஆச்சாரியார்கள் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு இறை வழபாடு நடத்துகின்றனர். சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
பிள்ளையார் சதுர்த்தி ஒரு காலத்தில் கோயில்களை மட்டும் சார்ந்ததாக இருந்தது. அன்று மக்கள் கோயில் சென்று வழிபடுவார்கள். இல்லங்களில் பூசிப்பார்கள்.
இன்று பிள்ளையார் நடுத் தெருக்களுக்கு வந்து விட்டார். சாதாரணமாகத் தொந்தியும் தொப்பையுமாகக் காணும் பிள்ளையார், இன்று காரில்,மோட்டார் சைக்கிளில், டிவி பார்த்தபடி,ஒய்யார போஸ்களில் எல்லாம் அவரவர் கற்பனைக்கேற்ப காட்சி தருகிறார். ஆள் உயரம் போய், தெரு மின் விளக்கைத் தொடுமளவுக்கு உயர்ந்து விட்டார்.
லட்சக் கணக்கில் செலவு செய்து ஒவ்வொரு தெரு முனைகளிலும் பிள்ளையாரை அமரச் செய்து, உண்டியல் வைத்து வசூல் செய்து, ஊர்வலமாக இழுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கின்றனர். மற்ற மதத்தினர் மனம் நோகும் வண்ணம், பிள்ளையார் ஊர்வலங்கள் போகத் தேவை இல்லாத தெருக்களில் போவதுண்டு.. சமாதானப் பிரியர் பிள்ளயாருக்காக (தெய்வங்களிலேயே அதிக ஓட்ட சாட்டமில்லாத அமைதித் தெய்வம் பிள்ளையார்) சண்டைகள் நடக்கின்றன. அதை அடக்கி ஒடுக்க ஒவ்வொரு பிள்ளையாருக்கும் போலிஸ் பந்தோபஸ்து!
அரசியல் போர்வை போர்த்தி, கட்சிகள் பிள்ளையார் சதுர்த்திக்கு பணம் திரட்டும் காட்சிகள்! பிள்ளையாரை தண்ணீரில் கரைக்கும்போது, வசூலித்த பணங்களின் கணக்குகளும் கரைக்கப்படும் நிலை!
பாஜக பிள்ளையார், திமுக பிள்ளையார், அதிமுக பிள்ளையார், கள் வேண்டுவோர் சங்க பிள்ளையார் என கட்சிப் பின்னணியில் பிள்ளையார் ஊர்வலங்கள் நடப்பதுண்டு. பஜகாவும், அதிமுகவும் பக்கா பக்திக் கட்சிகள்! மற்றவை மறைமுகமாக வணங்கும் பக்தர்கள் நிரம்பிய கட்சிகள்!
ஒருவரின் தெய்வ நம்பிக்கையை மற்ற எவராலும் தடுக்க முடியாது என்பதை ஏற்கிறோம். ஆனால் அதையே முழு மூச்சாக்கிப் பயனுள்ள மனித நேரங்களை வீணடிப்பதும், பணம் செலவு செய்வதும், ஆகமங்கள் நிறைந்த இந்து மதக் கோட்பாடுகளையே கேலிப் பொருளாக்குவதும் சரியா? எனக் கேட்கவே தோன்றுகிறது!
- ஏ.பி.ஆர். (சிங்கபூர்)