சென்னை: ஊழல் குறித்தும் ராஜிவ் இந்த நாட்டை விற்று விடுவார் என்றும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பேசியவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கருணாநிதி சிலையைத் திறக்கத்தான் நேற்று சோனியா ஓடோடி வந்தார்.
தன் கணவன் ராஜீவ் கொல்லப் படக் காரணமானவர்கள் பின்னணியில் திமுக.,வும் கருணாநிதியும் இருந்தும் கூட, அந்த கருணாநிதியின் சிலையைத் திறந்துவைக்க வந்த சோனியாவின் பெருந்தன்மையைப் பாராட்ட வேண்டுமென்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் இடுகிறார்கள்.
மேலும், நேற்றைய சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில்; நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக, இந்திராவின் மருமகளே வருக நல்லாட்சி தருக என கருணாநிதி அழைத்தார். இதுபோல் நான் தற்போது ராகுலே வருக நல்லாட்சி தருக என்று அழைக்கிறேன் என்றார். இந்நிலையில் அணி மாறுவதும், வசைபாடுவதில் பழசை மறப்பதும் திமுகவுக்கு கைவந்த கலை என்ற வகையில் சமூகவலை தளங்களில் கேலியும் கிண்டலும் தூள் பறக்கிறது.
கருணாநிதி 89-91ல் முதல்வராக இருந்த போது, நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சென்னையில் நடந்த பிரசார இறுதி நாளில் ; ” நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது போபர்ஸ் ஊழல். சாமானிய மக்களும் விமர்சிக்கும் வகையில் இந்த ஊழல் தெரிந்துள்ளது. ராஜிவ் பிரதமரானால் இந்த நாட்டை விற்று விடுவார்… என்று பேசியுள்ளார். இந்தப் பேச்சின் செய்தி இப்போது வைரலாகி வருகிறது.