மோகன்லால் ஏற்கனவே நடித்த பல படங்களின் முக்கிய காட்சிகள், அரசியல் கூட்ட பிரமாண்டங்கள், கலவரகாட்சிகள், தற்போதைய இண்ட்ர்நெட், டிவி,டிஜிட்டல் தொழில்நுட்பம், கொஞ்சம் புதுமை, 80.களில் வெளியான படத்தில் உள்ளது போல் ஒரு க்ளப் டான்ஸும் சேர்த்து தரமான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவுடன் வெளியிட்டால் படம் பிய்ச்சுக்கிட்டு ஓடும் என்ற வித்தையை துல்லியமாக புரிந்து கொண்ட பிரதிவ்ராஜ்.
சுகுமாரன் “லூசிபரில்” இறங்கி அடித்திருக்கிறார். இருபது நிமிடத்துக்குப்பின்னரே மோகன்லால் எண்ட்ரி கொடுக்கிறார். அதன்பின் அவர் வரும் காட்சிகளும், வசனங்களும் தியேட்டரில் தூள் கிளப்புகிறது.
இவர் எங்கே அரசியலுக்கு வந்து விடுவாரோ என சாய்குமாரும், நிஜமாகவே கேரளாவும் கேள்வி எழுப்பிகொண்டிருக்க, அதற்கு பதிலளிக்கும் விதமாகவே படத்தில் ஒரு காட்சி.”நான் அரசியலுக்கு வரமாட்டேன்!” என மோகன்லாலின் வாயாலே சொல்ல வைத்திருப்பது பிரதிவியின் டைரக்ஷன் டச். சில இடங்களில் ஹீரோயிசக்காட்சிகள்.
சண்டைப்பிரியர்களுக்காக வைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் இரண்டும் சூப்பர். ஒரு சண்டையின் போது தமிழ்ப்பாட்டு பின்னணியில் ஒலிக்கிறது..தூள் படத்தில் வருவதுபோல். ஆசிரம ஆயா, வேலைக்காரன், உயர் போலீஸ் ஆபிசர் ஜான் விஜய் என தமிழ் பேசும் கேரக்டர் தென்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மலையாள படங்களில் தமிழர்களை கேவலப்படுத்துவதுபோல் காட்சிகள் பிரதிவ்ராஜ் வைக்கவில்லை. மகிழ்ச்சி.
இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பிரதிவிராஜ், தான் பெற்ற அனுபவங்களை இம்மியும் பிசகாமல் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
படத்தின் தயாரிப்பாளரான மோகன்லாலின் தோஸ்த் ஆன்றணி பெரும்பாவூர் என்பதால் பல காட்சிகளில் பணத்தை வாரி இறைத்து பிரமாண்டம் காட்டியிருக்கிறார். நாட்டில் அரசியல் எப்படி எல்லாம் வளைந்து கொடுக்கிறது என்பதை படத்தில் புரிந்து கொள்ளலாம்.
விவேக் ஓபராய் அலட்டிக்காத வில்லன். மஞ்சு வாரியார் வழக்கம்போல் கோப வாரியார். டொவினோ தோமஸ்க்கு இந்த படம் ஒரு திருப்புமுனை.
பிருத்விராஜூம் கேங் லீடராக சில காட்சிகளில் வருகிறார். வசனமே இல்லை. ஆனால் படம் முடிந்தபின் காட்டும் பில்டப் எரிச்சல்.
காலா, 2.0 சறுக்கியபின்னர் ரஜினிகாந்தை தூக்கி நிறுத்தியது கார்த்திக் சுப்பராஜின் பேட்ட. ஒரு ரஜினி ரசிகர் படம் எடுத்தால் எப்படி படம் எடுப்பாரோ அப்படி இருந்தது பேட்ட. எல்லோரும் கொண்டாடினர். அதுபோலவே புலி முருகனுக்குப்பின்னர் சில படங்களால் சறுக்கியிருந்த மோகன்லாலுக்கு மீண்டும் பெயர் சொல்லும் படமாக அமைந்து விட்டது “லூசிபர்”.
தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அரசியல் கலந்த படம் கேரளாவில் ஹவுஸ் ஃபுல்.
சில இடங்களில் கத்தரி போட்டிருந்தால் இன்னும்கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
லூசிபர் – காக்டெய்ல்
– விமர்சகன்!