சிறுதானிய பிடிகொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி, குதிரைவாலி அரிசி – தலா 100 கிராம்,
தினை அரிசி, வரகு அரிசி – தலா 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 10
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் – ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்) தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உடைத்துக்கொள்ளவும். பிறகு மிளகு, துவரம்பருப்பை ஒன்றாக மிக்ஸியில் உடைக்கவும். ஒரு பங்கு உடைத்த சிறுதானிய அரிசிக் கலவைக்கு இரு பங்குத் தண்ணீரை எடுத்து, அதனுடன் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் அதனுடன் உடைத்த சிறுதானியக் கலவை, துவரம்பருப்பு – மிளகுக் கலவையைச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். பின்னர் இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, தயார் செய்துவைத்திருக்கும் கலவையில் சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கொத்சுவுடன் பரிமாறவும்.