நீதிமன்ற உத்தரவையும் மீறி 100 சதவீத பள்ளி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளில் கட்டணங்களை கட்ட வற்புறுத்தும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மீதான நீதிமன்ற விசாரணையில் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி தனியார் பள்ளிகள் தங்களிடம் படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் மூலமாக 40 சதவீதம் கல்வி கட்டணத்தை பெற்று கொள்ளலாம் என்று ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் பல தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை கட்ட தொடர்ச்சியாக பெற்றோர்களுக்கு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கும் போதே பெற்றோர் தரப்பிலும், வழக்கறிஞர் தரப்பிலும் பல புகார்கள் கொடுக்கப்பட்டது.
கடந்த 31ம் தேதி மீண்டும் ஒரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. அதில் எந்தெந்த பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை கட்ட வற்புறுத்துகின்றார்களோ அவர்கள் தொடர்பான ஒரு முழு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எந்தெந்த பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தை கட்ட பெற்றோர்களை வற்புறுத்தினார்கள் என்பது தொடர்பாக ஒரு முழுமையான பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்றும், அதேவேளையில் அந்த பள்ளிகள் மீது நீதிமன்ற உத்தரவிற்கு பின்பாக அவர்கள் எடுத்த நடவடிக்கை தொடர்பாக முழு விவரங்களை வரும் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.