சென்னையில் உள்ள கே.கே. டி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 22). இவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி கொடுங்கையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துமனைக்கு நேரடியாக விரைந்த கொடுங்கையூர் காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இந்த பெண்மணி ஒரு நபரை காதலித்து வந்து ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. தேவி அந்த பகுதியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் விகாஷ் என்பவரின் காதலில் வலையில் சிக்கியது தெரியவந்துள்ளது.
தேவி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சென்று விட்ட நிலையில், கடந்த 8 வருடமாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
விகாஷ் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், இருவரும் சந்தோஷமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். இந்த சமயத்தில், அவ்வப்போது திருமண ஆசைகாட்டி தேவி இருமுறை கர்ப்பமானதும், அதனை கலைக்க சொன்னதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், விகாஷை அவரது மாமா பெண்ணிற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட நிலையில், தேவியை கழற்றிவிட விகாஷ் முடிவு செய்துள்ளார்.
இதற்காக தனது வீட்டில் வரதட்சணையாக ரூ.இரண்டு லட்சம் பணம் கொடுத்தால் தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறி, தேவியுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். பணத்திற்க்காக தனது காதலை தூக்கி எறிந்த விரக்தியில், தூக்க மாத்திரை சாப்பிட்ட தேவி அங்குள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து இந்த தகவலை அறிந்த கொடுங்கையூர் காவல் துறையினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, குடும்பத்தினர் மறுப்பு காரணமாக ரூ.2 லட்சம் கேட்டு அவரை விட்டு விலகி சென்றதாகவும் விகாஷ் தெரிவித்துள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மற்றொரு நாளில் குடும்பத்தினர் சம்மதத்துடன் தேவியை திருமணம் செய்வதாகவும் விகாஷ் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குருஸ் தனது சொந்த செலவில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, பூ மாலை மற்றும் மஞ்சள் தாலி ஆகியவற்றை வாங்கி வரச்சொல்லி, காவல் நிலையத்திலேயே திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதன் பின்னர் தம்பதியின் கையில் தலா ரூ.500 கொடுத்து, வாழ்க்கையை நல்லபடியாக தொடங்கி, நல்லபடியாக இருக்குமாறும் வாழ்த்தி ஆசிர்வதித்து அனுப்பி வைத்துள்ளார்