பிளஸ் 1 வினாத்தாளில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தாண்டி கேட்கப்பட்ட கேள்விக்கு முழுமதிப்பெண் வழங்க, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கம் அரசு தேர்வுத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த மே 10ம் தேதி முதல் பிளஸ் 1 தேர்வுகள் துவங்கி நடந்து வருகின்றன.
27ம் தேதி கணினி அறிவியல் தேர்வு நடந்தது. இதில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தாண்டி கேள்வி இடம் பெற்று இருந்ததாக மாணவர்கள் சிலர் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து, சங்க பொதுச்செயலாளர் பரசுராமன் கூறுகையில், ”பிளஸ் 1 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வில் பகுதி நான்கில் வினா எண், 35 ( அ) கேள்வி 2021-22ம் கல்வி ஆண்டுக்கு தமிழக அரசால் வெளியிடப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இடம் பெறவில்லை.
ஆகவே, இப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்க முயற்சி செய்து இருந்தால் முழுமையான மதிப்பெண்களை வழங்கவேண்டும். இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனருக்கு மனு சமர்ப்பித்துள்ளோம்,” என்றார்.