அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என கோபிச்செட்டிபாளையத்தில் வாக்களித்தப்பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறைக்கு பின் ஜனவரி 3-ல் பள்ளி திறக்கப்படும்போது 3-ம் பருவ புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பள்ளி அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்… தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு நகராட்சி தொடக்க நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகள் நர்சரி பிரைமரி பள்ளிகள் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அல்லது இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த விடுமுறை நாட்கள் மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வசதியாக அமைய வேண்டும். மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் விளையாடி புத்துணர்ச்சி தருவதாக அமைய வேண்டும்.
ஆனால் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களில் கூட சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தகவல் வந்துள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் இந்த விடுமுறை தினங்களில் நடத்தக்கூடாது அதையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை அனைத்து பள்ளிகளுக்கும் தெரியப்படுத்தி உரிய அறிவுரை வழங்குவோம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது