அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை இன்று வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப் பட்டன. இதனால் பங்காரு அடிகளாரின் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நடிகர்கள் மோகன் லால், பிரபுதேவா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுக்கும் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.
சமூக சேவை, கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார்.
பத்ம பூஷன் விருதை மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். நடிகர் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிரபு தேவா தமிழரின் உடையான வேட்டி அணிந்தபடி கலந்து கொண்டு சிறப்பு கவனம் பெற்றார்.
டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகாதேவன், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.