-சரவண கார்த்திக்
கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் தேவஸ்தானம் சார்பாக பணியாளர்கள் தேர்வு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் மெய்க்காவலர்கள், மேளம் செட் தாயார் பெருமாள் புறப்பாட்டின் போது பந்தம் பிடிப்பவர், பரிசாரகர் மற்றும் அரையர் என வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப் பட்டு இருந்தது
இந்த வேலைவாய்ப்புகளில் அரையர் பணியிடமும் சேர்க்கப் பட்டுள்ளது பக்தர்களை மிகுந்த வேதனைப்பட வைத்துள்ளது. காரணம் என்னவென்றால் அரையர் என்பது பணியிடம் கிடையாது; அது மகத்தான சேவை! அந்த சேவையை பணியிடமாக அறிவித்து, வைணவ சம்பிரதாயத்தை, தாயார் ஆண்டாள் திருக்கோயில் தேவஸ்தான அலுவலகம் அவமரியாதை செய்துள்ளது.
அரையர் சேவையானது ஸ்ரீமந் நாதமுனிகளால் சுமார் 1300 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. நாலாயிர திவ்யப் பிரபந்தங்களின் தொகுப்பில் இருந்து ராகம், தாளம் அபிநயத்துடன் பெருமாளுக்கும் தாயாருக்கும் விண்ணப்பம் செய்ய இந்த முறையை ஸ்ரீமந் நாதமுனிகள் தன் சிஷ்ய பரம்பரையினருக்கு கற்றுத் தந்தார். அதன்பின் அவர்களின் வம்சாவழியினர் மூலம், இன்றுவரை ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ வில்லிபுத்தூர், திருவல்லிக்கேணி திருக்கோவில் ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே இந்த அரையர் சேவை உள்ளது
இந்த சேவை கல்லூரியிலோ அல்லது வேத பாடசாலையிலோ பயிற்றுவிக்கப்படுவது இல்லை. அரையர் ஒருவர் உருவாக வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகும்! அதுவும் எந்த சம்பளமும் இல்லாமல் பெருமாளுக்கும் தாயாருக்கும் தூய தமிழிலே 12 ஆழ்வார்களால் போற்றப்பட்ட திவ்ய பிரபந்தங்களில் இருந்து அபிநயத்துடன் சேவை செய்யும் இதுபோன்ற அரையர்களை பாதுகாக்க வேண்டியது இந்து சமய அறநிலையத் துறையின் கடமை!
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்கெனவே இந்த அரையர் சேவை தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இன்று வரை அந்த சேவையை பாலமுகுந்தாசாரியார் செய்து வருகிறார். இதற்கு முன் அவரின் சகோதரர், அவரின் தகப்பனார் என காலம் காலமாக சேவையாக செய்து வருகின்றனர். இப்பொழுது அவரின் மகனும் செய்து வருகின்றார்.
அப்படிப்பட்ட புராதனம் மிக்க பாரம்பரியமான அரையர் சேவையை பணியிடமாகக் கருதி வெளியிட்ட இந்து சமய அறநிலையத் துறையையும், தாயார் ஆண்டாள் திருக்கோவில் தேவஸ்தானத்தையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும் 2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இதுபோன்ற வழக்கில் தெளிவாக தீர்ப்பும் கொடுத்துள்ளது. அதில் எக்காரணத்தைக் கொண்டும் திருக்கோவிலின் உள்துறையின் தமிழக அரசோ அல்லது இந்து சமய அறநிலையத் துறையோ தலையிடக் கூடாது எனவும் அர்ச்சகர்களை நியமிக்கக் கூட இந்து சமய அறநிலையத் துறைக்கு உரிமை இல்லை என்றும் சொல்லியிருக்கிறது!
அதுமட்டுமல்லாமல் இந்த சேவை செய்பவர்கள் யார் மூலம் புதிதாக தேர்ந்தெடுப்பார்கள்? அப்படி தேர்வு குழுவில் உள்ளவர்களுக்கு அரையர் சேவையைக் குறித்து என்ன தெரியும்? அதற்கெல்லாம் அறநிலையத் துறையிடம் பதில் உண்டா?!
எனவே அரையர் சேவையை பணியிடமாக வெளியிட்டதை திரும்பப் பெற வேண்டும் என தமிழக இந்து சமய அறநிலையத் துறையையும், திருக்கோயில் தேவஸ்தானத்தையும் விஷ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை வலியுறுத்துகின்றது. மேலும் இது போன்று வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க பாரம்பரியமிக்க இந்த சேவையை பணி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் இதன் மூலம் கோரிக்கை வைக்கிறது!
(விஷ்வ ஹிந்து பரிஷத் – துறவியர் பேரவை மாநில அமைப்பாளர்)