எதிர்க் கட்சிகள் என்ற போர்வையில் ஆளும் கட்சிக்கு எதிராக அரசியல் செய்கிறோம் என்பதாக சொல்லிக்கொண்டு, தேசத்தையும் தேசத்தின் நலனையும் குழி தோண்டி புதைத்து, எதிரி நாடுகளுடன் கள்ள உறவாடும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக., போன்ற கட்சிகளின் செயல்பாடுகளால் நம் தேசத்தை ஆபத்து வெகுவாக சூழ்ந்திருப்பது நன்றாகவே தெரிகிறது.
அண்மைய இரு சம்பவங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பிரிவினைவாதிகள் கரங்கள் எப்படி ஓங்கி இருக்கின்றன என்பதை நாட்டுக்கு எடுத்துக்காட்டுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், இஸ்ரோ ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிக்காக அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவரை வரவேற்று, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வைத்திருந்த வரவேற்பு பேனரில் இடம்பெற்றிருந்த ராக்கெட்டின் முகப்பில் இந்திய தேசியக் கொடிக்கு பதிலாக சீன தேசியக் கொடி இடம்பெற்றிருந்தது.
இந்த விளம்பரம் அன்று காலையிலேயே பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. காரணம் அதற்கு முந்தைய நாள் தான் திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இடம்பெறப் போகும் நான்கு பேரை அறிமுகப்படுத்திவிட்டு இஸ்ரோவின் சாதனைகளை பறைசாற்றி விட்டு வந்தார்.
பிரதமர் கலந்து கொள்ளப் போகும் நிகழ்ச்சியும் கூட பாரதத்தின் விண்வெளி வலிமையை உலகுக்குப் பறைசாற்றிய இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி. ஆனால் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்ததோ அண்டை நாடான ஆக்கிரமிப்பு வெறியில் அலைந்து கொண்டு, நம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு வரும் சீனாவின் ஏவுகணை மற்றும் கொடியுடன் கூடிய படங்கள். குறிப்பாக அந்த படத்திற்கு அருகில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படம் வேறு!
சுய சார்பு, நாட்டின் வளர்ச்சி, சுதேசி சிந்தனை என தனது மன் கி பாத் உள்ளிட்ட வானொலி நிகழ்ச்சிகளின் மூலமும் மேடைப் பேச்சுகள் வாயிலாகவும் வலியுறுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் படம், சீன கொடி போடப்பட்ட விளம்பரத்தில் இடம்பெற்று இருந்த காரணத்தால் அது குறித்து தனது அதிருப்தியை தெரிவிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
எனவே, இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்தார்கள். இதை அடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. ஏற்கனவே இலங்கை வழியாகவும், தமிழகத்திலேயே இருக்கின்ற ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் சீன ஆதரவு பிரச்சாரம் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆளும் கட்சியின் தரப்பிலேயே சீன ஆதரவு நிலை எடுத்து பாரதத்தின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் சம்பவங்கள் நடப்பது பெரும் கவலைக்குரியது. இது ஒரு சம்பவம்.
அடுத்து, கர்நாடகாவில் நடந்த, நாடாளுமன்ற மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் உசைன் என்பவர் வெற்றிபெற்றதாக அறிவித்ததும், சட்டசபை வளாகத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டனர். ஏற்கனவே பெங்களூரு, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக அறியப்பட்டதுடன், கடந்த காலங்களில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத சம்பவங்கள், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இடமாகவே அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது இன்னொரு சம்பவமாவம பதிவாகியுள்ளது. மேலும் சட்டமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் ஒலித்த ஓரிரு தினங்களில் சரியாக வெள்ளிக்கிழமை மதியம், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் நடப்பதைப் போன்று, பெங்களூரு நகரத்தின் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டுகள் வெடித்தது!
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த இரு சம்பவங்களுமே திட்டமிட்டு நடந்த தவறுகள் அல்ல என்பது போல் தெரியும். பேனரை டிசைன் செய்யும்போது, டிசைன் செய்பவர் இணையதளத்தில் தேடிக் கிடைத்த படத்தை எடுத்து வைத்து கவனக்குறைவாக நடந்து கொண்டது போல் தோன்றும். ஆனால் அது ஏன் ஒரு அமெரிக்க ராக்கெட் ஆகவோ, ரஷ்ய ராக்கெட் ஆகவோ இல்லாமல் மிகத் தெளிவாக சீன ராக்கெட், சீனக் கொடியுடன் படம் மாட்டுகிறது என்பதை பற்றி நாம் யோசிக்க முடியாதா?
அது போல் கர்நாடக காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியால், வாய்தவறி பாகிஸ்தானை வாழ்த்தி கோஷமிட்டனர் என்பது போல் தோன்றும். அப்படியும் சொல்லிக் கூட காங்கிரஸ் காரர்கள் சமாளித்திருக்கலாம். ஆனால், இந்த தவறுகள் குறித்து சம்பந்தப்பட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கொடுக்கும் விளக்கங்கள்தான், பேராபத்தின் தன்மையை நமக்கு உணர்த்துகிறது.
திமுக அமைச்சரின் விளம்பரத்தில், இந்திய ராக்கெட்டுக்கு பதில், சீன ராக்கெட் படத்தை வைத்திருந்தார்களே என்ற கேள்விக்கு, ‘‘சீனாவை எதிரி நாடாக இந்தியா இதுவரை அறிவிக்கவில்லை. சீன அதிபரை நம்முடைய பிரதமரே விருந்தினராக தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளார். பாஜக.,வினர் பிரச்னைகளை திசை திருப்ப இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்’’ என்கிறார் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், அந்தக் கட்சியின் எம்பியுமான கனிமொழி.
அதாவது சீனாவை எதிரி நாடாக இந்தியா அறிவித்தால் மட்டுமே, சீனாவின் நயவஞ்சகத்தனம் வெளிப்படும் என்பது போல் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பேசுவது வெட்கக்கேடு. நாட்டில் உள்ள நடப்பு நிலைகளை நாட்டைச் சுற்றி நடக்கும் வெளிநாட்டு ஊடுருவல்களை எல்லாம் ஒவ்வொரு நாளும் பார்த்து அரசியலைத் தெரிந்து புரிந்து பேச வேண்டிய ஒரு நபர், இப்படி மிகக் கேவலமாகப் பேசுவது, அறிவீனத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, குதர்க்கமான, உள்நோக்கம் கொண்ட, பச்சை தேசவிரோத கருத்து மட்டுமே!
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் என்ற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்சி ஹரிபிரசாத் என்பவர், சட்டசபையில், ‘‘பாஜக.,வினருக்குத்தான் பாகிஸ்தான் எதிரி நாடு. எங்களைப் பொருத்தவரை பாகிஸ்தான் அண்டை நாடு தான்’’ என்று விளக்கம் கொடுக்கிறார். அவர் விளக்கம் கொடுத்த மறுநாளே பெங்களூரில் பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெடிகுண்டு சம்பவம் என்றால் நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்கள் என்ன யோசிக்க முடியும்?!
அதாவது, இஸ்ரோ திட்ட விழாவுக்கு வந்த பிரதமரை வரவேற்க சீன ராக்கெட் படத்தை பயன்படுத்தியது தங்களது கவனக்குறைவு அல்லது தவறு என்று ஒப்புக்கொண்டு சொல்லி இருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது.
காங்கிஸ் வேட்பாளர் வெற்றிபெற்றபோது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்டதும் தவறு என்பதை மாநில முதல்வர் ஒப்புக் கொண்டிருந்தால், மறுநாள் பெங்களூரில் குண்டு வெடித்தது ஒருவேளை தடுக்கப்பட்டு இருக்கலாம் அல்லது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்! ஆனால் நடந்த தவறுகளை நியாயப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் பேசுவது மட்டுமல்ல, தவற்றை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள் என்றால், நடந்த தவறு எதேச்சையாக, கவனக்குறைவால் நடந்ததல்ல. திட்டமிட்டு வேண்டுமென்றே செய்ததே என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.
பாஜக.,வை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு, இந்த நாட்டிற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேசவிரோத செயல்களை எதிர்க்கட்சியினர் செய்வதாகவே சிந்திக்கும் திறன் உள்ள இந்தியர்கள் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள். வாக்கு வங்கிக்காக, சிறுபான்மை தாஜா அரசியல் என்ற நிலைப்பாடு எடுத்து, அதை தேச விரோத சக்திகளை தோள்களில் சுமந்து கொண்டு திரியும் கேவலமான நிலைக்கு அரசியல் கட்சிகள் வந்துள்ளது, இந்த தேசத்தை, குறிப்பாக தென்னகத்தை சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்து என்பதை மட்டும் நாம் உறுதிபட கூறுகிறோம்!