சளி ஒழுகுதல்
ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரைத்தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளைச் சேர்க்க வேண்டும். பின்னர் அந்தப் பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி வடிகட்டி, காலையிலும், மதியத்திலும், மாலையிலும் ஆக மூன்று வேளை அரை டம்ளர் அளவு வீதம் சர்க்கரை கலந்து அருந்தினால் மூக்கிலிருந்து சளி ஒழுகுவது நின்றுவிடும். ஜலதோஷம் குணமாகும்.
ஜலதோஷம் – சளி ஒழுக்கு
சதா ஜலதோஷம் பிடித்துக்கொண்டு சளி ஒழுகிக்கொண்டே இருக்கும் நேரத்தில் சிறிதளவு நெருப்புக் கங்கை எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சலைத் தூள் செய்து வைத்துக்கொண்டு அந்த கங்கின் மீது தூவினால் புகை வரும். அந்தப் புகையை லேசாக முகர்ந்து கொண்டிருந்தால் ஜலதோஷம் குணமாகும் சளி ஒழுக்கு நிற்கும்.
இருமல்
வெந்தயம், சுக்கு, திப்பிலி இவை ஒவ்வொன்றையும் கால் ரூபாய் எடை அளவுக்கு எடுத்துக்கொண்டு அவற்றுடன் தூதுவளை வேரையும் ஒரு ரூபாய் எடை அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் அம்மியில் வைத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்பளர் தண்ணீர் விட்டு காய்ச்ச வேண்டும். அது அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சப்பட்டதும் அதை வடிகட்டிவிட வேண்டும். வடிகட்டப்பட்ட திரவத்தை குழந்தைகளா யிருந்தால் ஒரு சங்கு அளவுக்கும், பெரியவர்களாயிருந்தால் இரண்டு சங்கு அளவுக்கும் தினமும் இரண்டு தடவை கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இருமல் குணமாகிவிடும்.
வறட்டு இருமல்
கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம் பழத்தை ஒரு ரூபாய் எடை அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிற்றரத்தை, சுக்கு போன்ற ஒவ்வொன்றையும் ஒரு ரூபாய் எடை அளவுக்கு எடுத்து உரலில் போட்டு இடிக்க வேண்டும். அதை சலித்து கண்ணாடிசீசர்வில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு இரண்டு தேக்கரண்டி அளவு தூளை எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் போட்டு சூடாக்கி இறக்கிவைத்து விடவும். இளஞ்சூடாக இருக்கும் பொழுது சுத்தமான மெல்லிய துணியில் வடிகட்டி உடனே குடித்து விட வேண்டும். இவ்வாறு தினமும் இருவேளை அருந்தி வரவேண்டும். நாவு ருசிக்காக இதனுடன் பனங்கற்கண்டையோ, சர்க்கரையையோ சேர்த்துக்கொள்ளலாம்.