நீளமா தலைமுடி வெச்சிருக்கிறது குத்தமாய்யா?! பிடிச்சி கட் பண்ணி விட்டுட்டாங்க… அதுவும் மாணவிகளோட அழகான நீள கூந்தல..!
தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில், ஹாஸ்டல் மாணவிகளின் நீண்ட தலைமுடியை பிரின்சிபல் கத்தரித்து விட்டது இப்போது பரபரப்பான பேச்சாகியிருக்கிறது.
ஹரிஜன குருகுலம் பாடசாலையில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவிகளின் பின்னல்களை வெட்டிப் போட்ட பிரின்ஸ்பல் கடினமான விமர்சனத்திற்கு ஆளாகிய்யுள்ளார்.
பள்ளியின் பிரின்சிபல் கே. அருணாவின் ஓவர் ஆக்சனுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
குருகுலத்தில் தங்கிப் படிக்கும் அனைத்து மாணவிகளின் தலைமுடியும் கத்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரின்சிபல் சொன்ன காரணம்தான் பெரும் கோபத்தைக் கிளப்பியுள்ளது.
தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் மாணவிகளுக்கு தலைக்கு குளிப்பதற்கு நீர் அதிகம் தேவைப்படுவதாகவும் மாணவிகளுக்கு பேன் போன்ற தொல்லைகள் இருப்பதாகவும் பிரின்ஸ்பல் தரப்பிலிருந்து காரணம் கூறப்படுகிறது. அதோடு தலைமுடியை வெட்டுவதற்கு ஒவ்வொரு மாணவியிடம் இருந்தும் இருபத்தைந்து ரூபாய் வசூலும் செய்துள்ளார் பிரின்ஸ்பல்.
ஆனால் மாணவிகளின் தலை முடியைக் கத்தரித்து கிலோ 3000 ரூபாய்க்கு பிரின்சிபல் விற்று விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஹாஸ்டலில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை 180 மாணவிகள் படித்து வருகின்றனர். 180 பேருக்கும் கிராப் கட்டிங் செய்யப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கள் குழந்தைகளுக்கு இப்படி தலைமுடி கட் செய்யப் படும் என நிர்வாகம் தங்களிடம் தெரிவிக்கவோ அனுமதி பெறவோ இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் பெற்றோர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப் படவே, இப்போது மாவட்ட ஆட்சியர் எம். தர்மாரெட்டி பிரின்சிபலிடம் விளக்கம் கேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.