ஐஎன்எக்ஸ்., மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அண்மைக் காலமாக ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுக்களை விசாரித்து, ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து தடை செய்து ஒவ்வொரு கட்டமாக ஒத்திவைத்து வந்தது. இந்நிலையில் இன்று சிதம்பரம் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டுள்ளது ஆச்சரியத்துடன் கூடிய விவாதப் பொருள் ஆகியுள்ளது.
சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்த போது 2007ம் ஆண்டில் ஐ.ன்எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.350 கோடி முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. இதில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
இது போல், சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல் – மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3,500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவ்விரு வழக்குகளிலும் விசாரணையில் இருந்து சிதம்பரம் நழுவுகிறார் என்றும் எனவே, அவரை காவலில் எடுத்து
விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், இரு
விசாரணை அமைப்புகளும் தெரிவித்தன.
இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்ப தாகவும் ஆனால் தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்து, முன்ஜாமின் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு வழக்குகளிலும் சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து, 2018 ஜூலை 25 ஆம் தேதி முதலில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இதற்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனுக்களை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் அடுத்த 3 நாட்கள் தன்னைக் கைது செய்ய தடை விதிக்கும் படி சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனை பரிசீலனை செய்வதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை அணுகக் கூடும் என்று கூறப் படுகிறது.