பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் வருமான வரி ஒழிக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.
மேலும் நிரந்தர வைப்புத்தொகை மீதான வட்டியை உயர்த்தி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை கூறியிருக்கிறார்.
சண்டிகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம், பொருளாதார வளர்ச்சிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலனைத் தருமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, வருமான வரி ஒழிக்கப்பட வேண்டும் , நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை ஒன்பது சதவிகிதமாக உயர்த்த வேண்டும், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை ஒன்பது சதவிகிதமாக குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த மூன்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.
பொருளாதார வளர்ச்சியை வெற்றிப்பாதைக்குத் திருப்புவது தொடர்பாக தான் ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும், அது வரும் 5ஆம் தேதி வெளியாகும் எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.