நாட்டிலேயே முதன்முறையாகத் தனியார் கல்வித்துறையைச் சேர்ந்த பெண் ஊழியர்களுக்கும் பேறுகால அனுகூலச் சட்டத்தை அமல்படுத்த கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களின் பெண் ஊழியர்கள் ஆகியோர் பயனடைவார்கள்.
தனியார் நிறுவனப் பெண் ஊழியர்கள் பேறு காலங்களில் சந்திக்கும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் இந்தச் சட்டத்தை அமல்படுத்த அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்ப கேரள அரசின் கேபினட் கூட்டம் முடிவு செய்தது.
1961-ல் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி மகப்பேறுகால விடுமுறையாக 12 வாரங்கள் மட்டும் தொடக்கத்தில் இருந்தது. அது 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டு 2017-ல் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது.