தில்லியில் கொரோனா பாதித்த எய்ம்ஸ் டாக்டரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், உளவியல் துறையில் டாக்டராக பணிபுரிந்தவருக்கு , கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்பிணியான அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
அவரும் தனிமைபடுத்தப்பட்டதுடன், அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று(ஏப்.,3) இரவு அவருக்கு சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில், கொரோனா பாதித்த தம்பதிக்கு ஆரோக்கியமாக குழந்தை பிறப்பது இதுவே முதல்முறையாகும். இது தாடர்பாக எய்ம்ஸின் மருத்துவ கண்காணிப்பாளர் கூறுகையில், சிசேரியன் முறையில் டாக்டரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது, டாக்டர்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றினர். டாக்டர்கள், கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ளும் உடைகளை அணிந்திருந்தனர்.
டாக்டரின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்ததும், அவரை நாங்கள் தனிமைபடுத்திவிட்டோம். பிரசவத்திற்காக, அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி தற்காலிக அறுவை சிகிச்சை அறை தயார் செய்யப்பட்டது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.