உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்துடன் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கொரோனாவுக்கு 68 பேர் மரணமடைந்த நிலையில், 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் 60 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளார். அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும். மேலும் ராஜஸ்தானில் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 196 பேரில் 41 பேர் தில்லியில் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தகக்கது.