
ரம்ஜான் நோன்புக்காக கூடுதல் செலவினம் எனக் கூட பாராமல் தாராள நிதி ஒதுக்கீடு!! இந்து கோவில்கள் என்றால் மட்டும் பாரபட்சம்! என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆளும் திமுக அரசு வருகின்ற முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜான் நோன்பிற்காக 8,700 மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் 20 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக துவங்கப்பட்ட காலம் முதல் சிறுபான்மையினர் நலன் மீது அதீத அக்கறை செலுத்துவார்கள் என்பது எல்லோரும் அறிந்ததான். ஆண்டுதோறும் ரம்ஜான் நோன்பிற்காக பல்லாயிரக்கணக்கான மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அதைவிட அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்து கோவில்களின் பராமரிப்பு பணிகளுக்காக, ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கோவில்களுக்கு அந்த நிதி இன்றுவரை ஒதுக்கப்பட்டதா என்றால் இதுவரை இல்லை.
பல தொன்மை வாய்ந்த பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை பழுதடைந்த நிலையிலேயே இருக்கிறது. இதையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை கண்டு கொள்வதில்லை.
பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துகின்றோம் என்ற பெயரில் அவசர கதியில் கோவில்களினுடைய பராமரிப்பு பணிகளும் முறையாக நடைபெறாமல் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படுகிறது.
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தில் பல்வேறு வகையான குளறுபடிகள் ஏற்பட்டது. அங்கே கட்டிட வேலையின் போது உயிரிழந்த இளைஞருக்கு கூட தமிழக அரசு நிதி உதவி செய்யவில்லை.
பிரபல தொழிலதிபர் சிவநாடார் அவர்கள் திருச்செந்தூர் திருக்கோவிலின் கட்டிடப் பணிக்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். இதையெல்லாம் வாங்கிக்கொண்டு ஏதோ திமுக தனது சொந்த பணத்தில் கும்பாபிஷேகம் நடத்தியதாக பெருமை பேசிக்கொள்கிறது.
கோவில் சிலைகள் ஒரு பக்கம் களவு போகின்றன. பல கோவில்களில் திருத்தேர்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.
பல கோவில்களின் கும்பாபிஷேகத்தின் போது பொது மக்கள் அனுமதிக்கப்படாமல் அரசியல் கட்சிபிரமுகர்கள், அரசாங்க ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
கோவில்களின் உண்டியல் பணத்தை மட்டுமே பெரிதாக எடுத்துக் கொள்ளும் அறநிலையத்துறை. பக்தர்களின் வசதிக்காக எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை.
கடந்த வார தைப்பூச நிகழ்வில் கூட திருச்செந்தூர், பழனி போன்ற முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையெல்லாம் தாண்டி ஆகம விதிகளுக்கு எதிராக பிரேக்கிங் தரிசன கட்டண முறையை அறிமுகப்படுத்தவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பக்தர்களின் தொடர் எதிர்ப்பால் அந்தத் திட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடவுளை காட்சிப் பொருளாக்கி கட்டண தரிசன முறையில் மட்டும் கரிசனமாக நடந்து கொள்ளும் திமுக அரசுக்கு, இந்து கோவில்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
ஆனால் கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை புனரமைக்க முதலமைச்சர் அவர்கள் 20 கோடி ஒதுக்குகிறார். இந்த அரசு கிறிஸ்துவ சமுதாயத்திற்கு அரணாக நிற்கும் எனவும் பேசி வருகிறார்.
முஸ்லிம் சமுதாயத்திற்காக ஹஜ்யாத்திரை செல்லும் பயணிகளுக்கு அரசாங்க நிலத்தில் கட்டிடம் கட்டப்படுகிறது. இப்படியாக பெரும்பான்மை இந்து கோயில்களை பற்றி கவலைப்படாமல் சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களுக்கு சலுகை காட்டும் திமுகவின் போக்கு இந்துக்களை கோபமடையச் செய்திருக்கிறது.
17,000 இந்து கோவில்களில் ஒருவேளை பூஜை செய்யக் கூட வசதி இல்லை என தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்கிறது. ஆனால் இந்து கோவில்களின் மூலம் வரும் வருமானத்தைக் மட்டும் எடுத்துக்கொள்கிறது.
தற்பொழுது ரம்ஜான் நோன்பிற்காக வழங்கப்பட்ட நிதி என்பது முழுக்க முழுக்க தேர்தலை கவனத்தில் கொண்டு முஸ்லிம் ஓட்டுகளை பெறுவதற்கான தி.மு.கவின் திட்டமே என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
இந்து கோவில்கள் விஷயத்தில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படி இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..




