தில்லியில் 2 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த புற்றுநோய் மருத்துவமனை ஏப்.,29 வரை மூடப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தில்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 1,561 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 51 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. தில்லியில் தற்போது 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மாநிலத்தில் உறுதி செய்யப்பட்ட மிகக்குறைந்த வயதுடைய நோயாளியாக பதிவானது. இதனால் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த புற்றுநோய் மருத்துவமனை வரும் 29ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நர்ஸாக உள்ள குழந்தையின் தாயார், தற்போது 8 மாத கர்ப்பமாகவும் உள்ளார். ஏற்கனவே கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள இவர் மூலமாக தான் சிறுவனுக்கும் வந்திருக்கும் என நம்பப்படுகிறது.
இதனால் இவரின் கணவருக்கும் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறார். தாயார் பணிபுரியும் மருத்துவமனையில் 3 டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ‘அந்த மருத்துவனையின் டாக்டர் ஒருவர், இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பி வந்த தனது சகோதரனின் குடும்பத்தை பார்க்க சமீபத்தில் சென்றிருந்ததாகவும், அவர்கள் மூலமாக டாக்டருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பரவியிருக்கலாம்,’ என்றார். இதனையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையின் ஆய்வகங்கள், வெளிநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, சுமார் 45 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.