கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இவை எப்போது திறக்கப்படும் என மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் டிசம்பர் மாதம் வரையில் இதனை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலிலிருந்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதனிடையே, பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்றி மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் பங்கேற்ற மத்திய உயர் கல்வித்துறைச் செயலர் அமித் காரே, “கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி நடப்பாண்டு இறுதிக்குள் நடைபெறும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதே வேலையில் பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகளைத் தொடங்குவது தாமதமாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தாலும் zero academic year அறிவிக்கப்படாது என உயர்கல்வி செயலர் அமித் காரே நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்ற கல்வித்துறை உயர்மட்டக்குழு கூட்டத்தில், கல்வியாண்டு குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், சமூக இடைவெளியுடன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கல்வி ஆண்டைத் தொடங்க ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலோசனைகளின்படி ஊரடங்கு முடிந்து முதற்கட்டமாக, கல்லூரிகள் மற்றும் 10 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், டிசம்பர் மாதம் வரையில் ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் வரையில் ஆன்லைன் வழியாக கல்வி கற்பிற்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்தான இறுதி அறிவிப்பு அடுத்த 15 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசே இறுதி முடிவெடுக்கும்
பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசின் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டாலும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பைப் பொருத்து அந்தந்த மாநில அரசுகளே பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இறுதி முடிவெடுக்கலாம் என மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.