கொரோனா காலத்தில் சம்பளக்குறைப்பு செய்த முதலாளியை தொழிலாளி ஒருவர் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தஸ்லீம் (21) என்ற இளைஞர் தில்லியில் ஓம் பிரகாஷ் (45) என்ற பால்முகவரிடம் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி ஓம்பிரகாஷ் தஸ்லீமின் சம்பளத்தை குறைத்துள்ளார்.
இது குறித்து தஸ்லீம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்குமான உரையாடல் வாக்குவதமாக முற்றியுள்ளது. அதில் ஓம் பிரகாஷ், தஸ்லீமை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த தஸ்லீம் ஓம் பிரகாஷ் தூங்கும் போது அவரது தலையை கட்டையால் தாக்கியுள்ளார். பின்னர் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார். இறந்துபோன ஓம் பிரகாஷை ஒரு கோணியில் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு வழக்கம் போல் இருந்துள்ளார்.
ஓம் பிரகாஷின் உறவினர்களிடம் அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டதாக பொய் கூறியுள்ளார். ஆனால் மறுபக்கம் பயம் அதிகரிக்கவே இரவோடு இரவாக ஊரைவிட்டே தஸ்லீம் ஓடிவிட்டார்.
ஓம் பிரகாஷை காணாத உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். கடைசியாக தஸ்லீமுடன் தான் ஓம் பிரகாஷ் இருந்தார் என தெரியவர அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே அருகில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வருவதாக புகாரும் வந்தது. கிணற்றை சுத்தம் செய்து பார்த்தபோது ஓம் பிரகாஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் ஓம்பிரகாஷின் பைக், மற்றும் செல்போனுடன் மாயமான தஸ்லீமை போலீசார் தீவிரமாக தேடி தில்லி பகுதியில் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்