புதிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின்படி, இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீட்டின் கீழ் அவசரகால அதிகாரங்களை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது.
இந்நிலையில் இந்த சட்டத்தின் கீழ் முதன்முறையாக, மத்திய அரசு 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 வலைத்தளங்களை நீக்கியது. தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா, யூடியூப் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மீறும் வகையில் செயல்பட்ட யூ டியூப் சேனலை தடை செய்யுமாறு உத்தரவிட்டார்.
“இந்தியாவிற்கு எதிரான பிரச்சார இணையதளங்களை தடை செய்ய 2021 ஐடி விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்கள் மேற்கோள் காட்டப்படுவது இதுவே முதல் முறை” என்று மூத்த மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள், கொடியிடப்பட்ட யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் ‘இந்தியாவுக்கு எதிரான’ செய்திகளை வெளியிடுகின்றன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட ‘Naya Pakistan’ என்ற யூடியூப் சேனல், இந்தியாவில் விவசாயிகள் போராட்டம், சட்டப்பிரிவு 370 மற்றும் அயோத்தி வழக்கு குறித்து ‘தவறான செய்திகளை’ வெளியிட்டு கொண்டிருந்தது.
அகற்றப்பட்ட மற்ற சேனல்களில் Naked Truth, Junaid Halim Official, and 48 News ஆகியவை அடங்கும்.
முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரியில், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் சமூக ஊடக நிறுவனங்களுக்கான புதிய சட்ட விதிகள் மற்றும் OTT ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கான நெறிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.