தமிழர்களின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பொதுமக்கள் அதிகாலையிலேயே வீடுகளில் கோலம் வரைந்து, வர்ணம் பூசப்பட்ட புதுப்பானையில், புத்தரசியிட்டு, பொங்கலிட்டு இறைவனை வழிபட்டனர்.
இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் பகுதியில் பனிமழை நடுவே பொங்கல் கொண்டாடும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்திய எல்லையான லடாக்கின் கார்கில் பகுதியில் உள்ள பனிமழையில் ராணுவ வீரர்கள் பொங்கல் பானை வைத்து, தேங்காய், பழம் உள்ளிட்டவை கொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடி உள்ளனர்.
மேலும் அங்கிருக்கும் ராணுவ வீரர்கள் பொங்கல் வாழ்த்துகள் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து தை மாதம் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அதில், திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.