முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்தியா தொடரை வென்றது
இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் அது மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியையும் தொடரையும் வென்றது. பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்கள் பந்து வீசி, 3 மெய்டன், 12 ரன், 4 விக்கட் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தந்தார்.
9 ஓவர் வீசி 12 ரன்கள் மட்டுமே ஒரு பந்து வீச்சாளர் கொடுத்தால் 50 ஓவர் மேட்சில் எதிரணி என்ன செய்ய முடியும். டாஸ் வென்று மேற்கிந்திய அணி இந்தியாவை விளையாடச் சொன்னது. இன்று கே.எல். ராகுல் விளையாடியதால் இஷான் கிஷன் விளையாடவில்லை.
ஆனால் ரோஹித்துடன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் ரோஹித், ரிஷப், கோலி மூவரும் சரியாக விளையாடவில்லை. இதனால் முதல் 10 ஓவரில் மொத்தம் 37 ரன் மட்டுமே எடுத்தனர். அதன் பிறகு ஆடவந்த ராகுலும் (48 பந்துகள், 49 ரன்) சூர்யகுமார் யாதவும் (83 பந்துகள் 64 ரன்) சிறப்பாக ஆடினர். இருந்தாலும் ரன் ரேட் ஏறவில்லை.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 237 ரன் எடுத்தது. எளிதான இலக்கை அடைய மேற்கிந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தமது இன்னிங்ஸை நன்றாகத் தொடங்கினார்கள்.
ஆனால் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் இன்று சிறப்பாக பந்து வீசினர்; தொடர்ந்து விக்கட் எடுத்தனர்; குறிப்பாக பிரசித் கிருஷ்ணா இன்று மிகவும் கஞ்சத்தனமாக பந்து வீசினார். எனவே 46 ஓவரில் அனைத்து விக்கட்டையும் இழந்து 193 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
எனவே 44 ரன் களில் இந்தியா வெற்றிபெற்று போட்டியையும் தொடரையும் வென்றது.
சென்ற போட்டியின்போது பொலார்ட் வருத்தப்பட்டது போல இந்தப் போட்டியிலும் மேற்கிந்திய அணி 50 ஓவர்களை முழுமையாக ஆடவில்லை.
கோலியின் ஆட்டம் கவலையளிக்கிறது. இன்று ஒரு மிகச் சாதாரணமான ஷாட் ஆடி அவர் அவுட்டானார். இன்றைய ஆட்டம் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து’