பிஎஸ்என்எல் ஞாயிற்றுக் கிழமைகளில் அளித்து வந்த இலவச அழைப்புகள் சலுகையை வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப் போகிறது.
அரசு சார் தொலைத் தொடர்பு நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), வாடிக்கையாளர்களைக் கவரவும், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும், கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, இரவு நேரத்திலும், (இரவு 9 – 6) , ஞாயிற்றுக்கிழமைகளிலும் இலவச அழைப்புகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இம்மாத மத்தியில் இரவு நேர இலவச அழைப்புகளுக்கான நேரம் 9 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட்டு, குறைக்கப் பட்டது.
தற்போது, ஞாயிற்றுக்கிழமைக்கான இலவச அழைப்புகள் சலுகையையும் திரும்பப் பெற பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. இதன்படி, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் புதிய மாறுதல்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய திட்டங்களை அந்த அந்த மண்டலங்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில்,பி.எஸ்.என்.எல் நிறுவனமோ இருக்கும் சலுகைகளையும் பறித்து வருகிறது குறிப்பிடத் தக்கது.