பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி புதிய கணக்குகளைத் தொடங்குவதற்கு தடை விதித்து ரிசா்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் செல்போனில் இருக்கும் செயலி மூலமே பணப்பரிவர்த்தனை செய்கின்றனர்.
அந்தவகையில் முதன்மையாக இருப்பது பேடிஎம் பேமண்ட்ஸ் உள்ளது. இந்த நிலையில், பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி புதிய கணக்கை தொடங்க ரிசர்வ் வஙகி தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பணப்பரிவா்த்தனை விதிகளை மீறி செயல்பட்டதற்காக பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளா்கள் புதிதாக கணக்குகளைத் தொடங்குவதற்கு தடைவிதிக்கப்படுகிறது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (1949) 35ஏ பிரிவின் கீழ் புதிய கணக்குகள் தொடங்குவதை உடனடியாக நிறுத்துமாறு பேடிஎம் வங்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வங்கியின் தகவல்தொழில்நுட்ப அமைப்பில் விரிவான தணிக்கையினை மேற்கொள்ள குழுவை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய கணக்குகளைத் பேடிஎம் வங்கிக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.
பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி சேவை கடந்த 2016-ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும் நொய்டாவில் உள்ள கிளையின் மூலமாகவே தனது செயல்பாட்டை முறையாகத் தொடங்கியது.
தகவல் தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் வரையில் புதிய கிரெடிட் காா்டுகளை வழங்கவும், புதிய டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தவும் எச்டிஎஃப்சி வங்கிக்கு கடந்த 2020 டிசம்பரில் ரிசா்வ் வங்கி தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.