ஐபிஎல் 2022 – தோல்விகளால் துவண்டு போயிருக்கும் அணிகள்
– K.V. பாலசுப்பிரமணியன் –
முதல் ஆட்டம் – சென்னை vs சன்ரைசர்ஸ்
அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆகியோர் சன்ரைசர்ஸ் குழுவில் இனி நிரந்தரமாக ஆட இடம்பிடிப்பார்கள் என நினைக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக நான்காவது ஆட்டத்தில் தோல்வியடைந்து, பிளேஆஃப்களுக்குச் செல்ல வேண்டுமானால் இனி வரும் பத்து ஆட்டங்களில் குறைந்தபட்சம் எட்டில் வெற்றி பெறவேண்டிய நிலையில் உள்ளது.
இன்று நடந்த இரண்டு ஆட்டங்களில், முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து (அபிஷேக் 75, திரிபாதி 39*) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (7 விக்கெட்டுக்கு 154 ரன்) (மொயீன் 48, வாஷிங்டன் 2-21, நடராஜன் 2-30) 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 155 ரன்களை தங்கள் சர்வதேச நட்சத்திரங்களின் பெரிய பங்களிப்பு இல்லாமல் சேஸ் செய்தது. இதனால் அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு ஆட்டங்களில் நான்காவது தோல்வியினைத் தந்தது.
இந்த வெற்றியை இருபது ஓவர்கள் முடிய இன்னும் 15 பந்துகள் மீதமிருந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் அவர்கள் சேஸர்களாக மோசமான அணி என்ற பெயரைக் கொண்டவர்கள். தொடக்க ஆட்டக்காரராக இருந்த அபிஷேக் ஷர்மா, 50 பந்தில் 75 ரன்கள் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதம். மற்றும் ராகுல் திரிபாதி 15 பந்தில் 39 ரன்களுடன் அவருடன் நிலைத்து ஆடினார். சர்வதேச நட்சத்திரமான கேன் வில்லியம்சன் 40 பந்தில் 32 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வழக்கமான தொடக்கத்தைப் பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா இருவரும் பவர்பிளேயைப் பயன்படுத்த விரும்பினார்கள். ஆனால் நான்காவது ஓவரில் வாஷிங்டன் பந்தில் உத்தப்பாவும் ஆறாவது ஓவரில் நடராஜன் பந்தில் கெய்க்வாடும் ஆட்டமிழந்தனர். மொயின் அலியும் அம்பாடி ராயடுவும் ரன் எடுத்தனர்; ஆனால் ரன்ரேட் மிகக் குறைந்துவிட்டது. பின்னர் வந்த ஷிவம் துபே, ஜெதேஜா, தோனி ஆகியோரால் அதிக ரன்னும் எடுக்க முடியவில்லை, ரன்ரேட்டையும் உயர்த்த முடியவில்லை.
இப்படியாக சென்னை அணியின் தோல்விப் பயனம் தொடர்கிறது. சன்ரைசர்ஸ் அணி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
மும்பை vs பெங்களூரு
ஐபிஎல் 2022 தொடரின் 18வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. கோலி, அனுஜ் ராவத் இருவரும் பேட்டிங்கில் மிரட்டினர். பெங்களூர் அணி மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார். அணியின் ஸ்கோர் 62ஆக இருக்கும்போது மூன்று விக்கட்டுகள் விழுந்தது மும்பை அணிக்குப் பாதகமாக அமைந்தது. இதன்பின் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு, அந்த அணியின் கேப்டனும் துவக்க வீரருமான டூபிளசிஸ் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான அனுஜ் ராவத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலியும் தன் பங்கிற்கு 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.3 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸை போல நடப்பு தொடரில் 4வது தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.