ராமாயணத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகருக்கு மிக முக்கிய இடம் உண்டு. அக்காலத்தில், பஞ்சவடி எனப்பட்ட இப்பகுதியில்தான் வனவாசத்தில் இரண்டரை ஆண்டுகள் தனது மனைவி மற்றும் தம்பியுடன் ஸ்ரீராமர் தங்கி இருந்தார். நாசிக் நகரில் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே, கோதாவரி நதிக்கரையில் மிகப்பழமையான காலாராமர் கோவில் அமைந்துள்ளது. இஸ்லாமிய படையெடுப்பில் பழைய கோயில் அழிக்கப்பட்டது. 1782-ல் சர்தார் ரங்காராவ் ஒடேகர் என்பவர் இக்கோவிலை சீரமைத்தார். 12 ஆண்டுகளாக, தினமும் 2,000 பணியாளர்களைக் கொண்டு கட்டப்பட்ட பிரம்மாண்ட கோவில் இது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இருக்கும் ஸ்ரீராமர், சீதாபிராட்டி, லட்சுமணர் ஆகியோரின் சிலைகள், கோதாவரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டவை.
குஜராத் மாநிலத்தில் கோவில் நகரமான சோம்நாத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில், திரிவேணி சங்கம் அருகே ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் நுழைவு வாயிலில் வில் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு அடுக்குகள் கொண்ட இக்கோவிலில் கீழ்த்தளத்தில் பஜனை அரங்கம், தியான மண்டபம் ஆகியவை உள்ளன.
மேல்தளத்தில் உள்ள கர்ப்பகிரஹத்தில்
ஸ்ரீராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், அனுமன் ஆகியோருக்கு மார்பிள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் மேல்தளத்தில் இருந்து சோம்நாத் கோவில், கடற்கரை, சூரியக்கோவில் ஆகியவற்றை பார்க்க முடியும்.








