ஐபிஎல் 2022 – 22 ஏப்ரல் 2022 ராஜஸ்தான் vs டெல்லி
– K.V. பாலசுப்பிரமணியன் –
கடைசி ஓவர் களேபரங்கள்
நேற்று, ஏப்ரல் இருபத்தியிரண்டாம் நாள் ராஜஸ்தான் டெல்லி அணிகளுக்கிடையே மும்பையின் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 34ஆவது போட்டி நடந்தது. ராஜஸ்தான் அணி (222/2, ஜாஸ் பட்லர் 116, படிக்கல் 54, சஞ்சு சாம்சன் 46) டெல்லி அணியை (208/8, ஷா 37, வார்னர் 28, பந்த் 44, லலித் யாதவ் 37 போவல் 36, பிரஸித் கிருஷ்ணா 3/22) தோற்கடித்தது.
டாஸ் வென்ற டெல்லி அணி ராஜஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னது. ராஜஸ்தான் அணி தனது பேட்டிங் திறமையைக் காண்பித்தது. முதல் 50 ரன்களை 31 பந்துகளில் அடித்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அடுத்த 50 ரன்களை அடுத்த 25 பந்துகளில் அடித்தனர்.
அதற்கடுத்த 21 பந்துகளில் 150 ரன்களை அந்த அணி சேர்த்தது. அணியின் ஸ்கோர் 155 ஆக இருக்கும்போது முதல் விக்கட் (தேவதத் படிக்கல் 54 ரன், 35 பந்துகள், 7 ஃபோர், 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்த 25 பந்துகளில் அணியின் ஸ்கொர் 200ஐத் தொட்டுவிட்டது. 19ஆவது ஓவர் முடிவில் பட்லர் ஆட்டமிழந்தார் (116 ரன், 66 பந்துகள் 9 ஃபோர், 9 சிக்சர்). ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 222 ரன் எடுத்தது.
டெல்லி அணியின் மட்டையாளர்கள் நன்றாகவே தொடங்கினார்கள். ஐந்தாவது ஓவரில் வார்னர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 43. அடுத்து வந்த சர்ஃப்ராஸ் கான் உடனே ஆட்டமிழந்தார். 10ஆவது ஓவரில் பிருத்வி ஷா ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 99.
அதன் பின்னர் ரன் ரேட் குறையத் தொடங்கியது; விக்கட்டுகளும் விழத்தொடங்கின. 16 ஓவர் முடிவில் டெல்லி அணிக்கு 24 பந்துகளில் 61 ரன் அடிக்கவேண்டிய ஒரு நிலை. 17ஆவது சாஹால் வீசிய ஓவரில் 10 ரன்கள் அடித்தனர்.
18ஆவது ஓவரில் இரண்டு சிக்சர்களுடன் 15 ரன்கள் அடித்தனர். மிக டென்ஷனான 19ஆவது ஓவரை ப்ரசித் கிருஷ்ணா ஒரு விக்கட்டுடன் மெய்டனாக வீசினார். ஆறு பந்தில் 36 ரன்கள். டெல்லி அணியால் அடிக்க முடியாது என்ற ஒரு மகிழ்ச்சியில் ராஜஸ்தான் அணி இருந்தது. புதிய வீரர் (பையன் என்று சொல்லலாம்; ஆஜானுபாகுவாக இருக்கிறார்; ஆனாலும் வயது மிகக் குறைவு) மெகாய் பந்து வீச வந்தார். மறுமுனையில் பொவல். முதல் மூன்று பந்துகளும் சிக்சருக்குப் பறந்தன.
அந்த வேகத்தில் ஆடியிருந்தால் பொவல் ஆறு சிக்சர் அடித்து ஒருவேளை மேட்சை ஜெயித்திருக்கலாம். டெல்லி அணி அநாவசியமாக ஒரு சர்ச்சையைக் கிளப்பி போவலின் கவனத்தைக் கலைத்தனர். மூன்றாவது பந்து இடுப்பிற்கு மேல் வந்ததால் அது ‘நோ பால்’ என சர்ச்சை. அதனால் நாலாவது பந்தில் அவர் ரன் எடுக்கவில்லை; ஐந்தாவது பந்தில் 2 ரன் எடுத்தார்; ஆறாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணி வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது போலத் தோன்றினாலும் வெற்றிக்குத் தகுதியான அணி ரஜஸ்தான் அணியே.