44ஆவது செஸ் ஒலிம்பியாட்- பூஞ்சேரி, மாமல்லை
மூன்றாம் நாள் 31.07.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று இந்திய ஆண்கள் A அணி கிரீஸ் நாட்டு அணியையும், இந்திய ஆண்கள் B அணி சுவிட்சர்லாந்து நாட்டு அணியையும், இந்திய ஆண்கள் C அணி ஐஸ்லாந்து நாட்டு அணியையும் மூன்றாவது சுற்றில் சந்தித்தன. அதேபோல இந்திய பெண்கள் A அணி இங்கிலாந்து அணியையும் இந்திய பெண்கள் B அணி இந்தனோசிய அணியையும் இந்திய பெண்கள் C அணி ஆஸ்திரிய அணியையும் சந்தித்தன.
இந்திய ஆண்கள் A அணியில் ஹரிகிருஷ்ணாவும் அர்ஜுன் எரிகைசியும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர். விதித் குஜராதியும் சசிகிரணும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். இந்திய 3-1 என்ற கணக்கில் வென்றது. இந்திய ஆண்கள் B அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், ரௌனக் சாத்வானி நால்வரும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர்.
இந்திய ஆண்கள் C அணியில் சேதுராமனும் அபிஜித் குப்தாவும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர். கங்குலியும் அபிமன்யுவும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர்.
இந்திய பெண்கள் A அணியில் இன்று கோனேரு ஹம்பி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக எட்டு மாத கர்ப்பிணியான ஹரிகா த்ரோணவள்ளி ஆடினார். அவர் ஆட்டத்தை ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் பக்தி குல்கர்ணியும் தலா ஒரு புள்ளி பெற்றனர். தானியா சச்சதேவ் ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். இந்திய பெண்கள் B அணியில் வந்திகா அகர்வாலும் சௌம்யா சுவாமிநாதனும் ஆட்டத்தில் வெற்றிபெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர். பத்மினியும் மேரி ஆன் கோம்ஸும் ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர்.
இந்திய பெண்கள் C அணியில் நந்திதாவிற்கு வாக் ஓவர் கிடைத்தது. அதனால் அவர் ஆடாமல் ஜெயித்தார். பிரத்யுஷா போத்தா வெற்றி பெற்று ஒரு புள்ளி பெற்றார். ஈஷா கர்வடே ட்ரா செய்து அரைப்புள்ளி பெற்றார்.
வர்ஷிணி இன்று ஆஸ்திரிய வீராங்கனை நிகொலாவிடம் தோற்றுப்போனார். இருப்பினும் இந்திய பெண்கள் C அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.