புது தில்லி:
லலித் மோடியைப் போல், விஜய் மல்லையாவைப் போல், நீரவ் மோடியைப் போல் இன்னொரு மோசடி என்று ரோட்டோமேக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோத்தாரியை ஊடகங்கள் சுட்டிக் காட்டின. இதற்கு பதிலளித்துள்ள விக்ரம் கோத்தாரி, நான் எங்கேயும் ஓடிவிடவில்லை, குடும்பத்தினருடன் கான்பூரில்தான் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளில் ரூ 4,232 கோடிக்கு கடன் வாங்கியுள்ளார், ரோட்டோமேக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோத்தாரி. இந்தக் கடனை அவர் முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என்று அவர் மீது வங்கிகள் குற்றம் சாட்டி வருகின்றன. விக்ரம் கோத்தாரி வழங்கிய 600 கோடி ரூபாய்க்கான காசோலை திரும்பிவிட்டது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக அவர்மீது எப்ஃஐஆர் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த நிலையில் விக்ரம் கோத்தாரியு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார், நீரவ் மோடியைப் போல் ஓடி விட்டார் என்று செய்திகள் பரவின. ஆனால், இந்தச் செய்திகளை மறுத்துள்ள விக்ரம் கோத்தாரி, ‘நான் எங்கும் தப்பி ஓடவில்லை. கான்பூரில் எனது குடும்பத்தினருடன்தான் இருக்கிறேன். எனது தொழில்களைக் கவனித்து வருகிறேன். கடன் விவகாரத்தை கவனத்தில் வைத்து வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன். இதுதொடர்பான விவகாரம் நடுவர் மன்றத்தில் உள்ளது. எனது காசோலை பௌன்ஸ் ஆனதாகக் கூறப் படுவது பொய். என்மீது அவதூறு பரப்பப் படுகிறது. நான் நீதித்துறையை நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.1,400 கோடி, அலகாபாத் வங்கியில் ரூ.352 கோடி, பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ. 1,395 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.600 கோடி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.485 கோடி என விக்ரம் கோத்தாரி கடனாகப் பெற்றுள்ளதாகக் கூறப் படுகிறது. அவர் பெற்ற கடன்களுக்காக, அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
சிபிஐ விக்ரம் கோத்தாரி மீது வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் இன்று கான்பூரில் வைத்து விக்ரம் கோத்தாரி கைது செய்யப் பட்டுள்ளார்.