கேரளாவை உலுக்கியெடுத்துள்ளது ஓர் ஆணவக் கொலை. விடிந்தால் கல்யாணம் செய்து கொள்ளும் மகளை தந்தையே தீர்த்துக் கட்டியுள்ளார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக, தனது மகளை தந்தையே கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இது குறித்து காவல்துறை தெரிவிக்கையில், `கேரள மாநிலம் பூவதி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா (22). மருத்துவக் கல்லூரியில் டயாலிஸிஸ் மையத்தில் வேலை பார்த்து வந்த இவரின் தந்தை ராஜன், ஒரு டிரக் ஓட்டுநர்.
வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆதிராவும், ராணுவத்தில் பணிபுரியும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் ஆதிராவின் தந்தைக்கு இதில் விருப்பமில்லை. ஆனால் ஆதிராவின் தாய், மகளின் ஆசைப்படி திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆதிராவின் தந்தையைத் தவிர குடும்பத்தில் இருந்த அனைவரும் ஆதிராவின் ஆசையை நிறைவேற்ற சம்மதித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று (23.3.2018) திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவருடன் மகளுக்குத் திருமணம் நடப்பதை ராஜனால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு ஆதிராவிடம் வந்தவர், தன் மகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில், கையில் வைத்திருந்த கத்தியால் மகளை சரமாரியாகக் குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதிராவை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆதிராவின் உயிர் பிரிந்தது. இதை அடுத்து, ராஜனைக் கைது செய்த காவல் துறை, மேற்கொண்டு விசாரித்து வருகிறது.