ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ செயற்கைக் கோள் தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு, ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. ஆனால், விண்ணில் செலுத்தப்பட்ட 48மணி நேரத்துக்குள் செயற்கைக் கோளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகார பூர்வ செய்தி வெளியிட்டுள்ள இஸ்ரோ, “வெள்ளிக்கிழமை அன்று பூமியின் முதல் சுற்றுவட்டப் பாதையை நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள், 2ம் வட்டப்பாதைக்குள் நுழைந்தது. அந்நேரம் வரையில், செயற்கைக்கோளில் இருக்கும் எல்ஏஎம் எனும் மோட்டார் நன்றாக செயல்பாட்டில் இருந்தது. பின்னர், 2ம் வட்டப்பாதை தொடங்கி 51 நிமிடங்கள் வரை இருந்த சிக்னல், அதன் பின்பு தகவல் தொடர்பை இழந்தது.
செயற்கைக்கோளுடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோளில் உள்ள மின்சாதனத்தில் கோளாறா, அல்லது மின்மோட்டாரில் சிக்கலா, ஆன்டனாவில் இருந்த சிக்னல்கள் அனுப்புவதில் பிரச்சினையா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். இது விஞ்ஞானிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.