புதுதில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த தீபக் மிஸ்ரா அக்டோபர் 1 ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதி யாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் பதவி ஏற்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோகாய், வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அடுத்த 14 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் நீடிக்கும் அவர், அடுத்த ஆண்டு நவம்பரில் ஓய்வுபெற உள்ளார்.
இதனிடையே, தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள ரஞ்சன் கோகாய் சொத்து மதிப்பு குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் வெளியிட்டார். அதில், ரஞ்சன் கோகாய்க்கு சொந்தமாக தங்கம் எதுவும் இல்லை. அவரது மனைவிக்கு திருமணத்தின் போது அவரின் பெற்றோர் சீதனமாக அளித்த நகைகள் மட்டுமே உள்ளது. சொந்த வாகனங்கள் ஏதும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக நீதிபதிகளாக இருப்பதால் அரசு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்.
தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள கோகாய்க்கு சொந்தமாக வீடோ, வங்கி கடனோ, சொத்துக்கள் அடமானமோ ஏதும் இல்லை. எல்ஐசி பாலிசி, வங்கி சேமிப்பு என ரூ.30 லட்சம் மட்டுமே உள்ளது.