ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நேற்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் சுமார் 200 கிலோ வெடிபொருளை எறிந்து வெடிக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்தனர்.
உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ள இந்தக் கொடூரத் தாக்குதலில், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலபேரியை சேர்ந்த கணபதி என்பது மகன் சுப்பிரமணியன்(28). ஐ.டி.ஐ வரை படித்துள்ள சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எப். போலீசில் சேர்ந்தார்.
உத்திரபிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த சுப்பிரமணியன் சென்னை காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி, என்ற மனைவி உள்ளார். குழந்தைகளை இல்லை. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.
தைப்பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த ஞாயிறன்று தான் ஊரிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தான் வேலைக்கு செல்வதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்கொலை படைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் குடும்பத்திற்கு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், குழப்பமான சூழ்நிலை இருப்பதாகவும், அரசு உறுதி படுத்தி தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரமணி தந்தை கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.