“ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் ‘இந்து’ வுக்குக் குடியுரிமை உண்டாம் – ஆனால் இலங்கையில் இருந்து வரும் இந்து அகதியாகவே இருப்பானாம் – ஏனெனில் அவன் தமிழன்தானே!”- என்று ஆளூர் ஷாநவாஸ் பெயரில் ஒரு பதிவு பார்த்தேன்.
இப்படிப்பட்ட விசிக, நாதக, திராவிடியாள்ஸ் கோஷ்டிகளுக்கு சமயம் கிடைக்கும் போது தமிழன் என்பவன் ஹிந்து ஆகி விடுவான்.
இல்லாவிட்டால் தமிழன் இந்து இல்லை – தமிழனுக்கு மதமே இல்லை என்றெல்லாம் உதார் விடுவார்கள்!
நாம் விஷயத்துக்கு வருவோம். 1983 ல் சிங்களவர்கள் ஏற்படுத்திய கலவரம்! பிந்தைய ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கும் – இலங்கை ராணுவத்துக்கும் நடைபெற்ற யுத்தங்கள்…
கலைஞர் பாணியில் சொல்வதானால் விடுதலைப் புலிகள் இதர தமிழ் அமைப்பினருடன் நடத்திய ‘சகோதர யுத்தங்கள்’… !ஆகியவற்றால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஈழத் தமிழர்கள் அகதிகளாக ஓடிவந்தது உண்மை!
அவர்களில் கணிசமானோர் ஆண்டுக் கணக்கில் தமிழகத்திலேயே தங்கியும் விட்டனர். ஆனால் இப்போது என்ன நிலைமை? இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் – அந்நாட்டு அரசுக்கும் உண்டான மோதல் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
இப்போது அங்கே…
1) வடக்கு மாகாணத்தில் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தமிழ் அரசும் – அதற்கு ஒரு தமிழர் முதலமைச்சராகவும் இருக்கிறார்.
2) முன்னாள் போராளிகள் – ஈழப் பிரிவினை கோரியவர்கள் உள்ளிட்ட பலரை உள்ளடக்கிய ‘தமிழ் தேசியக் கூட்டணி’ – Tamil National Alliance (TNA) – என்ற அமைப்பு இலங்கை ஜனநாயகத்தில் பங்கேற்கிறது.
அந்த TNA அமைப்புக்கு சுமார் 16 MP க்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
3) நடந்து முடிந்த இலங்கைத் தேர்தலில் ஓரணிமாகத் திரண்டு – POLARISE ஆகி- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஈழத்தமிழர் வாழும் பகுதிகளில் பெருமளவு 73% கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகத் தமிழர்கள் திரண்டு வாக்களித்து உள்ளனர்!
அதாவது ஜனநாயக பூர்வமாக அணிதிரண்டு ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்குத் தமது எதிர்ப்பைக் காட்டும் அளவுக்கு ‘தீர்மானகரமான சக்தியாக’ (DECISIVE FORCE) அங்கே இலங்கையில் தமிழர்கள் விளங்குகிறார்கள்!
4) இத்தனையும் கடந்து அங்கே ராஜபக்சே மந்திரிசபையில் இரண்டு தமிழர்கள் அமைச்சர்களாகவும் உள்ளனர்.
இந்தச் சூழலிலும் இந்தியாவில்தான் இருப்போம் என்று விரும்புவது இங்கு ஒரு காலத்தில் அகதிகளாக வந்தோரின் விருப்பமாக இருக்கலாம்! அவர்களைத் திரும்பச் செல்ல நாம் வற்புறுத்தவில்லை – ஆனால் ‘பிரஜா உரிமை’ தர முடியாது!
மேற்கண்ட நான்கு நிலைமைகளில் ஒன்றுகூட ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் அவற்றில் இருந்து விரட்டப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாது!
அதே போல வங்கதேசத்தில் அகதிகளாக வந்த முஸ்லீம்கள்!
அப்போது வங்கதேசம் என்பது ‘கிழக்கு’ பாகிஸ்தானாக இருந்தது! கிழக்குப் பாகிஸ்தானிய முஸ்லீம்கள் மீது , மேற்குப் பாகிஸ்தானிய முஸ்லீம் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் கொடூரமானவை!
அப்போது 1970 – 71 ஆண்டுகளில் மேற்குப் பாகிஸ்தான் முஸ்லீம் அரசால், கொடுமைப்படுத்தப்பட்ட கிழக்கு பாகிஸ்தானிய முஸ்லீம்கள் இந்தியாவில் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஓடி வந்தார்கள்.
பிறகு 1971 யுத்தத்தில் – இந்தியாவின் துணையுடன் கிழக்கு பாகிஸ்தான் தன்னை மேற்கு பாகிஸ்தானின் கோரப் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு – தன்னை சுதந்திர நாடாக – ‘வங்க தேசமாக’ பிரகடனப்படுத்திக் கொண்டது!
ஆனால் அந்தக் கிழக்கு பாகிஸ்தானிய அகதி முஸ்லீம்கள், இந்தியாவே சுகமாக இங்கேயே தங்கிவிட்டனர்.
அவர்களுக்கு என்று ‘வங்க தேசம்’- என்ற நாடு உருவான பின்னரும்! இதுவரை 48 ஆண்டுகள் கடந்தும்! ஷேக் முஜிபுர் ரஹ்மான், ஜியா உல் ஹக், கலீடா ஜியா, எர்ஷத், ஷேக் ஹசீனா என்று வெவ்வேறு ஆட்சியாளர்கள் வந்து வங்க தேசத்தை ஆண்டும்….
அந்தக் கிழக்குப் பாகிஸ்தானிய முஸ்லீம்கள் எவரும் தங்கள் தாய் பூமியான வங்கதேசம் செல்லவில்லை!
(இங்கிருக்கும் இடதுசாரி லிபரல் அறிவுஜீவிகளைப் போல அவர்கள் – இந்தியாவில் எமக்குப் பாதுகாப்பு இல்லை – இந்தியா வாழத் தகுதியற்றது என்றெல்லாம் கோஷம் போடவில்லை – இந்தியாவில் சுகமாக செட்டில் ஆனார்கள்).
அந்த முஸ்லீம்கள் இப்போதும் தங்கள் பூர்வீக பூமியான வங்க தேசத்தில் – முன்னாள் கிழக்கு பாகிஸ்தானில்- போய் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளது! எனவேதான் முஸ்லீம்களுக்கு இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது!
அப்படி ஒரு வசதியும் வாய்ப்பும் ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் இங்கிருந்தெல்லாம் விரட்டியடிக்கப்பட்ட பௌத்த, பார்சி, ஜைன, சீக்கிய, கிறிஸ்தவ, இந்து மக்களுக்கு இல்லை! எனவேதான் அவர்களுக்கு இங்கே நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுகிறது!
நன்றி: முரளி சீதாராமன் (Murali SeetharamanJi)