நான் பாஜக.,வில் இணைய மாட்டேன் என்று ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக சச்சின் பைலட் பாஜக.,வில் இணைவார் என்று கடந்த இரு தினங்களாக தகவல் பரவிய நிலையில், தாம் அவ்வாறு பாஜக.,வில் இணையப் போவதில்லை என்று கூறிவிட்டார் சச்சின் பைலட். ஆனால் அவர் மேற்கொண்ட முயற்சிகளால், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்துக்கு நேர்ந்த கதி, ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும் ஏற்படும் என்று கூறிக் கொண்டிருந்தவர்களின் கணிப்பை பொய்யாக்கும் விதத்தில் சில நடவடிக்கைகளை ராஜஸ்தான் காங்கிரஸ் மேற்கொண்டது.
காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இரண்டு பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு இருக்கிறார் .
ராஜஸ்தானில் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி மற்றும் கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால், முதல்வர் அசோக் கெலாட் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதேபோல் அங்கு சச்சின் பைலட் ஆதரவு அமைச்சர்கள் 2 பேர் நீக்கப்பட்டு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் காங்கிரஸ் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ராஜஸ்தானில் தற்போது உள்ள கணக்குப்படி அங்கு காங்கிரஸ் கட்சியில் அசோக் கெலாட் ஆட்சிக்கு 102 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. சச்சின் பைலட் தரப்பில் அவரையும் சேர்த்து 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த 17 பேரும் நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அப்படி இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவையின் பலம் 200ல் இருந்து 183 ஆக குறையும். அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய எண்ணிக்கை 92 ஆகக் குறையும்.
தற்போது காங்கிரஸ் கட்சியிடம் 102 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட் எளிதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற முடியும்.
இந்த கணக்கு, தற்போது சச்சின் பைலட் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகக் கூறப் படுகிறது. ஏனென்றால் தனக்கு எப்படியும் 30 எம்எல்ஏக்கள் ஆதரவு தருவார்கள் என்று சச்சின் பைலட் நினைத்தார். ஆனால் அவருக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளனர்.
தற்போது அந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் மற்றவர்கள் இதனால் தயங்குவார்கள் என்று கூறப் படுகிறது.