கொல்லிமலை அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டலினிநாடு அருகே உள்ள கீரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவருடைய மனைவி தீபா (27). இவர்களுக்கு 6 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 13- ஆம் தேதி (திங்கள்கிழமை) தீபா தனக்குச் சொந்தமான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். திடீரென்று அவை, காப்புக்காட்டுக்குள் நுழைந்ததால் அவற்றை விரட்டுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றார். அதன்பின் இரவு நெடு நேரமாகியும் தீபா வீடு திரும்பவில்லை.
தீபா வீடு திரும்பாததால் பயந்துபோன கணவர் நடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் அவரை பல இடங்களில் தேடிவந்தனர். ஆனாலும் தீபா கிடைக்கவில்லை.
கடந்த 13ஆம் தேதி மாலை தீபா எடுக்காடு வனப்பகுதியில் ஆடைகளின்றி நிர்வாணமான முறையில், முகம் சிதைக்கப்பட்டு, உடல் சேலையால் கட்டப்பட்ட நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
அவரின் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான அடையாளமும், காணப்பட்டன. இதனை கண்டு தீபாவின் கணவர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் தீபாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வாழவந்தி நாடு காவல் துறையினர் கொடூரமாக கொலை செய்த நபர் யார் என்று வலைவீசி தேடிவந்தனர்.
உடற்கூறாய்விலும் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்போன் காணாமல் போனதை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
அந்த செல்போனை கொல்லிமலைப் பகுதியில் ஒருவா் பயன்படுத்தி வருவது தெரியவர, சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
தீபா கொலை வழக்குத் தொடர்பாக கொல்லிமலை அருகே உள்ள பொல்லாகாட்டுப்பட்டி குண்டூர்நாடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் ஜூலை 15- ஆம் தேதி கைது செய்தனர்.
மாடு மேய்பதற்காக வனப்பகுதிக்கு தீபா தனியாக செல்வதை பாா்த்த அந்த சிறுவன் தகாத உறவுக்கு அழைத்தபோது, அந்த பெண் மறுப்பு தெரிவிக்க வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்தக் கொலை சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஆத்துக்காடு ஓடையில் தீபா குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவர் குளிப்பதை மறைந்து நின்று பார்த்துள்ளார்.
பின்னர் அவரை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அழைக்கவும் செய்திருக்கிறார். சிறுவனின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த தீபா, அவரை கன்னத்தில் அறைந்ததோடு, கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு விரட்டிவிட்டுள்ளார். இந்த நிலையில்தான், கடந்த 13- ஆம் தேதியன்றும் ஆத்துக்காடு ஓடைக்குத் தனியாக அழுக்குத் துணிகளைத் துவைப்பதற்காக வந்துள்ளார் தீபா. அதை மறைந்து இருந்து பார்த்திருக்கிறான் சிறுவன்.
அப்போது திடீரென்று கால்நடைகள் காப்புக்காட்டுக்குள் சென்றதால், அதை விரட்டுவதற்காக காப்புக்காட்டுக்குள் சென்றார் தீபா. ஏற்கனவே வாய்ப்புக்காக காத்திருந்த சிறுவன், தீபாவை தன் ஆசைக்கு இணங்குமாறு அழைத்திருக்கிறான். தனியாக மாட்டிக்கொண்டதை அறிந்த தீபா, கூச்சல் போட்டுள்ளார். அவர் சத்தம் போடாமல் இருக்க, அவரை தாக்கியதோடு, தீபா அணிந்திருந்த பாவாடையை கழற்றி வாயை இறுக்கமாகக் கட்டியுள்ளான் சிறுவன்.
அதன்பிறகு அருகில் கிடந்த கல்லை எடுத்து அவருடைய தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். அதன் பிறகே அந்தச் சிறுவன் தீபாவை பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார். அதன்பிறகு மீண்டும் கல்லால் தாக்கி கொலை செய்திருக்கிறார். இதையடுத்து தீபாவின் செல்போனில் இருந்தே வெளியூரில் உள்ள தனது உறவினர் ஒருவருக்குத் தொடர்பு கொண்டு பேசிய அந்தச் சிறுவன், தான் தலைமறைவாகப் போவதாகச் சொல்லியிருக்கிறான்
தீபாவின் செல்போனைக் கைப்பற்றிய தனிப்படை காவல்துறையினர், அதில் பதிவாகியிருந்த எண்களின் அடிப்படையில் விசாரித்தபோதுதான் தீபாவைக் கொன்றது, உள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனும், தீபாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
17 வயது சிறுவன் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.