மதுரை அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் அழகு வள்ளி (வயது 35). இவருக்கு அவரது உறவினர்கள் சிலர் பாலியல் தொல்லை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வள்ளி, அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்து வள்ளியை அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அழகு வள்ளி, வில்லாபுரம் – விமான நிலைய மெயின் ரோடு எம்.எம்.சி காலனி அருகே சுமார் அரைமணி நேரம் நடுரோட்டில் மறியலில் ஈடுபட்டார். இருபுறமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்க, நடுவில் அமர்ந்து போலீசாரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார். இது குறித்து தகவலறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் அழகு வள்ளியை சமரசப்படுத்த முயன்றனர்.
அதை ஏற்க மறுத்த அழகு வள்ளி, என்னை அலைக்கழித்த போலீசார் இங்கு வரவேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தார். இதைத் தொடர்ந்து அழகு வள்ளிக்கு உறுதுணையாக நின்ற அவரின் உறவினர்கள் சிலரைக் கைது செய்ய முயன்றபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆட்டோ ஒன்றில் வலுக்கட்டாயமாக அழகு வள்ளியை ஏற்றி போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.