இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலை ஒட்டி பெய்த பலத்த மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டிய நிலையில், ஏரியைத் திறந்துவிட பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று இரவுக்குள் செம்பரம் பாக்கம் ஏரிக்கு மேலும் அதிக நீர் வரத்து இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கையாக ஏரியில் இருந்து உபரிநீர் இன்று மதியம் 12 மணி அளவில் திறக்கப்படுகிறது. ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், ஏரி நீர் பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. நீர் வரத்துக்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.