நாகர்கோவில் அருகே வீட்டில் மின்கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 70 வயது மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடிவீஸ்வரத்தில் தளவாய் தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருமதி ஆறுமுகம். 70 வயதான இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவரது மகள்கள் மற்றும் மகன் திருமணமாகி இரு வேறு இடங்களில் குடியிருந்து வருகின்றனர். இதனால் இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் வீட்டுக்குள் காணப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடித்தது.
தொடர்ந்து மின்னல் வேகத்தில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் திருமதி.ஆறுமுகம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அப்பகுதி குறுகலான தெரு என்பதால் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தும் உரிய நேரத்தில் தீயணைப்புத்துறையினர் வர இயலவில்லை.
அப்பகுதி முழுவதும் வீடுகள் நிறைந்துள்ளதால் மற்றும் குறுகலாக உள்ளதால் தீயணைப்புத் துறையினரால் வாகனத்துடன் சம்பவ பகுதிக்கு வர இயலவில்லை. இதனால் மூதாட்டியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.