பாஸ்டேக்’ முறையில், ஒரே நாளில், ரூ.102 கோடி அளவுக்கு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது, இதற்கு முன் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.
சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும், பாஸ்டேக் வசதி, 2016ம் ஆண்டு, அறிமுகம் செய்யப்பட்டது.
சமீபத்தில், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச் சாவடிகளில், இந்த பாஸ்டேக் முறை, கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பாஸ்டேக் முறை வாயிலாக வசூலிக்கப்பட்டுள்ள சுங்க கட்டணம், கடந்த நான்கு நாட்களில், 23 சதவீதம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக, கடந்த, 19ம் தேதி மட்டும், நாடு முழுதும், 102 கோடி ரூபாய், பாஸ்டேக் முறையில் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில், இவ்வளவு அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது, இதுவே முதன்முறை. பாஸ்டேக் முறை கட்டாயம் ஆக்கப்படுவதற்கு முன், 85 கோடி ரூபாய் மட்டுமே, தினசரி சுங்க கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
தற்போது, 17 கோடி ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமாக, நேர்மையற்ற ஊழியர்களால் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு வந்துள்ளது, இதன் வாயிலாக தெரிகிறது.
ஒரு நாளில், 17 கோடி ரூபாய் என்றால்; ஒரு மாதத்திற்கு, 510 கோடி ரூபாய்; ஒரு ஆண்டுக்கு, 6,120 கோடி ரூபாய் என பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த பணத்தை வைத்து, ஒரு நகருக்கு, மெட்ரோ ரயில் திட்டத்தையே கொண்டுவர முடியும்.