ஏ.. நாங்க யார் தெரியுமா?.. உதார் விட்ட கொள்ளையர்களை உதைத்து துவைத்த ஊர் மக்கள்!

Published:

Robbers 2 - 2026

மாரியம்மன் கோவிலில் கொள்ளையடித்த திருடர்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்போது பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கிய நிலையில், மக்களிடம் சவால் விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் சோற்றுக்கால் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை நேரத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், கோவில் காவலாளியை தாக்கி அறையில் பூட்டி விட்டு, கோவிலின் பூட்டை உடைத்து அம்மனின் தாலி, கிரீடம், நகைகள் மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

அறையில் அடைக்கப்பட்ட காவலாளி தனது அலைபேசி மூலமாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் கொள்ளையடித்த பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போது பொது மக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கி உள்ளனர்.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

பரமத்தி வேலூரில் தப்பிய கொள்ளைக்கும்பல், அங்குள்ள கீரம்பூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மூவரையும் பொதுமக்கள் பிடித்து கை, கால்களை கட்டிப் போட்ட நிலையில், மதுரை பேச்சுவழக்கில் பொதுமக்களை மிரட்டியதால் தாராளமாக அவர்களுக்கு தர்ம அடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடம் அடிவாங்கி பொங்கிய இளைஞர்கள், காவல்துறை வரட்டும் எங்களை கைது செய்யட்டும், அதற்குப் பின்னர் எங்களை பற்றி தெரியும்.

எங்களை அடித்து விட்டீர்கள் அல்லவா?, நாங்கள் வெளியே வந்ததும் இந்த ஊர் எப்படி பதறும் என்று பாருங்கள். மதுரையில் எத்தனை தலையை உருட்டி இருக்கிறோம், இப்ப கத்தி இல்லாமல் உள்ளதால் தப்பித்தீர்கள்.

யூடியூபில் எனது புகைப்படத்தை போட்டு பாருங்க, நான் கல்லூரி மாணவன் தான். பொறுமையை இழந்தால் அவ்வளவுதான். காவல்துறை வந்தாலும் எங்களின் கை, கால்களை உடைக்க தான் முடியும். தூக்கில் போட முடியாது என்று மிரட்டியுள்ளனர்.

பொறுமையை இழந்த பொதுமக்கள், எங்க ஊருக்கு வந்து எங்களையே மிரட்டுகிறாயா? என்று கூறி அடித்து நொறுக்கியுள்ளனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், மூவரும் மதுரையை சேர்ந்த ராசு, முருக சூர்யா, கருப்பசாமி என்பதும், இவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 3 இளைஞர்களும் தற்போது சிறையில் உள்ளனர்.

Related articles

Recent articles

spot_img