ஆன்லைன் கேம் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட பேரன் பாட்டியை கடவுள் சொன்னதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.
திண்டுக்கலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் படிப்பில் 3 ஆம் ஆண்டு படித்து வருபவர் ஹரிஹரன். இவர் செல்போனில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டை எல்லை கிராமத்தில் வசித்து வரும் தனது பாட்டி மாரி வீட்டிற்கு வந்துள்ளார் ஹரிஹரன். சிறிது நாட்கள் அங்கையே தங்கி இருந்த பேரனை பாட்டி மாரி பராமரித்து வந்துள்ளார்.
நேற்று நள்ளிரவில் அருகில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் இருந்து பாட்டி வீட்டிற்குச் சென்ற ஹரிஹரன் பப்ஜி விளையாட்டில் வருவது போல அரைகுறை ஆடையுடன் எல்லை கிராமத்தின் வீதிகளில் ஓடினார். இதைப்பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள். சிறிது நேரத்தில் மாரி வீட்டிற்குள் அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அக்கம்பகத்தினர் ஓடி சென்று உள்ளே பார்த்த போது மாரி கல்லால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தார்.
பின்னர் உடலை சாலைக்கு எடுத்து வந்த ஹரிஹரன் தன் மீது அமர்ந்தபடி சில மந்திரங்களை படித்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பேரன் ஹரிஹரனிடம் விசாரணை நடத்தியதில் அவர் கடவுள் தான் பாட்டியை கல்லால் அடித்து கொலை செய்ய கூறினார் என தெரிவித்துள்ளார்.
மாரியின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட ஹரிஹரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.