சிஷ்யர்: பலருக்கு ஆன்மீக வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்து அவர்கள் ஆசையை வெல்ல வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஆசைகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன இதற்கு காரணம் என்ன ?
ஆச்சாரியாள்: ஆசையை அடக்குவதற்கு முதலாவது நாம் ஆசையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருக்க வேண்டும். பிரம்மச்சாரி ஒருவனை மதியத்தில் தூங்க வேண்டாம் என்று கூறலாம். அவனுக்கே மதியத்தில் தூங்குவது தவறு என்று பட்டது என்றால் சற்று நாட்களுக்கு தூங்காமல் இருப்பான். பிறகு இன்னொரு நாள் தூங்கினால் என்ன தவறு என்று அவனுக்குத் தோன்றும். ஆகவே முதலில் நாம் ஆசையை வெல்ல வேண்டும். சிலர் விவேகத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பார்கள் ஆனாலும் ஆசை போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள் காரணம் வைராக்கியம் இல்லை ஏன் அதை உண்டாக்கும் விவேகம் இல்லை. விவேகம் இல்லாமல் இருந்தால் ஒருவனுக்கு எப்போதுதான் வைராக்கியம் உண்டாகும்? ஆகவே எப்போதும் விவேகத்திற்கு இடம் கொடுக்க வேண்டும்.
விவேகத்தினால் வைராக்கியம் வரும் வைராக்கியத்தினால் ஆசையடங்கும். மேற்க்கொண்டு ஆன்மீக வாழ்விற்க்குரிய சாதனங்களை சிரத்தையுடன் செய்ய வேண்டும். முதலில் அவைகளில் ருசி இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவைகளை நாம் விட்டுவிட்டால் ஆசைகள் எப்படி அடங்கும்? கர்மயோகம் மானசீக பூஜை இறைவனின் சிந்தனை போன்றவற்றை எப்போதும் செய்து கொண்டே வர வேண்டும் தியானமும் செய்தால் மிகவும் நல்லது. சாஸ்திரங்களை படிப்பது மிகவும் அவசியம்.
சிஷ்யர்: இம்மாதிரி சாதனங்களை அனுஷ்டித்தால் சில சமயங்களில் ஆசைகள் வராமல் இருக்கலாம். ஆனால் திடீரென்று ஆசைகள் வந்து விடுகின்றனவே இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?
ஆச்சாரியாள்: ஒரு உதாரணம் கூறுகிறேன் ஒரு ஸ்ப்ரீங் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் ஒரு பாகத்தை ஒரு சுவற்றில் இணைத்துக் கொள்வோம் மற்றொரு பாகத்தை நாம் பிடித்து இழுத்துக் கொண்டே போனால் அந்த ஸ்பிரிங்கும் நெகிழ்ந்து நீளம் கொடுக்கும். எப்பொழுது இழுப்பதை நாம் விடுவோமோ உடனே அந்த ஸ்பிரிங் பின் இழுத்துக்கொள்ளும். மனம் என்கிற ஸ்பிரிங்கை உலகம் என்கிற சுவரில் கட்டி விட்டோமானால் ஆன்மீக முயற்சியால் அந்த இழுத்துக் கொண்டே போனாலும், விட்டுவிட்டால் அது பழைய நிலைக்கே போய்விடும். ஆதலால் ஆசைகளை ஒழிப்பதற்கு வழி பார்க்க வேண்டுமே தவிர அந்த சமயத்தில் மட்டும் அடக்கி வைத்தால் போதாது.
சிலர் ஆசையை முழுவதும் ஒழிக்க மாட்டார்கள். ஒரு ஆசை வந்தால் ஐயோ இப்போது இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணி அதனை அடக்கி விடுவார்கள். இப்படிச் செய்தால் அந்த ஆசை உள்ளேயே இருக்கும். அதற்கு பிறகு திடீரென்று வந்து விடும். அந்த ஆசையைப் புரிந்து கொண்டபின் அதனால் நமக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதையும் புரிந்து கொண்ட பின் அதை போக்க வழி தேட வேண்டும் இது போல் செய்தால் ஆசை திடீரென்று எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆசையை வெல்வதற்கு ஒருவன் முயன்றாலும் அது கடினமாக இருக்கிறது என்றால் அப்படிப்பட்டவனுக்கு சத்சங்கம் மிகவும் அவசியம். மகான்களின் சந்நதியிலாவது ஆசை அடங்கும். அடிக்கடி சாஸ்திரங்களைப் படிப்பது நல்லது. சாஸ்திரங்கள், லௌகீகப் பொருட்களால் நமக்கு இன்பம் இல்லை என்று கூறுகின்றன. சாஸ்திரத்தில் நமக்கு விசுவாசம் இருந்தாலும் அந்த விசுவாசம் பூரணமாக இருப்பதில்லை. ஆதலால் சில சமயங்களில் இப்படி செய்தால் என்ன? என்று தவறான எண்ணம் ஏற்படலாம். இவ்வெண்ணத்தைப் போக்குவதற்கு மீண்டும் மீண்டும் சாத்திரங்களைப் படிப்பது தான் நல்லது.