அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் சுரேஷ் (36) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
விவசாய தொழிலாளியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் வழக்கம்போல் சுத்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று அவர் நேற்று மது வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் பாட்டிலை திறந்து ஒரு டம்பளரில் பாதி அளவு மதுவை ஊற்றி குடித்தார்.
தொடர்ந்து அவர் மீதமுள்ள மதுவை குடிப்பதற்காக டம்பளரில் ஊற்றும்போது மது பாட்டிலில் பாம்பு குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் அவருக்கு லேசான மயக்கமே வந்துவிட்டது.
இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக சுரேசை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது பாட்டிலில் பாம்பு குட்டி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி குடிமகன்களிடையே வேகமாக பரவியுள்ளது.
இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று அந்த கடையில் கலாட்டா நடக்கும் என்பதில் எவ்வித மாறுபட்ட கருத்தும் இல்லை.